
தவெகவுடன் கூட்டணி என்றால் பாஜகவை கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா? என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவட் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.
இந்த சம்பவத்தில் எதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கோருகிறார்கள் என தெரியவில்லை. கரூர் சம்பவம் நெரிசலால் ஏற்பட்டதல்ல; வேறு யாருடைய தூண்டுதலில் பேரில் நடந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள்; அதனால்தான் அவர்கள் திசை திருப்ப பார்க்கிறார்களோ என்கிற விமர்சனமும் கூடவே எழுந்தது.

கூட்ட நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகள் பிறரால் தூண்டப்பட்டு நடத்துவது அல்ல. தன்னார்வத்தோடு வரக்கூடியவர்கள் குறிப்பிட்ட என்ணிக்கைக்கு மேல் அதிகரிக்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கும்பமேளா, கர்நாடகாவில் கிரிக்கெட் விளையாட்டின் போது நடந்த நிகழ்வு, ஆந்திராவில் நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படம் பார்க்க சென்றபோது நடந்த நிகழ்வு என இதுபோன்ற சம்பவம் பல இடங்களில் நிகழ்ந்துள்ளது.
கரூர் சம்பவத்தில் இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளை சொல்வதையே பாஜக வாடிக்கையாக கொண்டுள்ளது. கற்பனையாகவும், யூகத்தின் அடிப்படையிலும் பல விஷயங்களை நயினார் நாகேந்திரன் பரப்பி வருகிறார். அரசியல் செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தமிழக பாஜக தலைவராக நயினார் நியமிக்கப்பட்டுவிட்ட போதும், அண்ணாமலை நான் தான் தலைவர் என்கிற மனநிலையில் ஏதேதோ பேசி வருகிறார். விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்படப் போகிறது என புரியவில்லை.
விஜய் மக்கள் செல்வாக்கு பெற்று இயங்கக்கூடிய தலைவராக இருக்கிறார். அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படு அளவுக்கு எந்த சூழலும் இல்லை. ஆனால் ஏன் இப்படி கூறி வருகிறார் என அண்ணாமலை தான் விளக்க வேண்டும். கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய்க்கு நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது. அதனால அவர் பின்னால் யாரும் வர வேண்டாம்; தொண்டர்கள், நிர்வாகிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வர வேண்டாம் என கோரிக்கை வைத்திருப்பதில் தவறில்லை.
அதிமுக – தவெக கூட்டணி என்பது திட்டமிட்டு அதிமுகவால் பரப்படும் வதந்தி. பாஜக-வை கழற்றிவிட்டு விட்டு தவெக உடன் கூட்டணி வைக்க அதிமுக தயாராக இருக்கிறதா?? அவ்வாறு அமைத்தால் அதிமுகவின் நம்பகத்தன்மை போய்விடும். அண்ணாமலை முந்திரிக்கொட்டைத் தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது” என்று தெரிவித்தார்.