இந்தியாவில் ஒரே கலாச்சாரம், ஒரே மதம்தான் இருக்க வேண்டும் என்ற அரசியலை உயர்த்தி பிடிக்கிறார்கள், இதே நிலை நீடித்தால் மகேந்திர ராஜபக்சவிற்கு நடந்த நிலைதான் இங்கே உள்ள அரசியல்வாதிகளுக்கும் நடக்கும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


உலக தமிழ் வம்சாவளியினர் 9 வது மாநாடு சென்னை வர்தக மையத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், செஞ்சி. மஸ்தான்,விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். கலந்து கொண்ட அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் இலங்கை,மலேசியாவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “இந்திய அளவில் தொழிற் துவங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் 14 வது இடத்தில் இருந்த தமிழகம் , தமிழக முதல்வரின் திட்டங்களால் 3 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொரோனா, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றில் இருந்து மீள தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் 7 லட்சத்து 7 ஆயிரத்து 681 பதிவு செய்யப்பட்ட சிறு, குருந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 64 லட்சத்து 44 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “இலங்கை பொருளாதார சரிவு ஏற்பட்டதற்கு அவர்களின் தவறான அரசியல் கொள்கையே காரணம். இலங்கையில் சிங்களமயமாதலும் பவுதமதமாதலும் கொள்கை நிலைபாடாக இருந்தது. இந்தியாவில் சனாதனமதாலும்,சமஸ்கிருதமாதலுமாக கொள்கை நிலைபாடாக உள்ளது. இந்தியாவில் ஒரே கலாச்சாரம், ஒரே மதம்தான் இருக்க வேண்டும் என்ற அரசியலை உயர்த்தி பிடிக்கிறார்கள், இதே நிலை நீடித்தால் மகேந்திர ராஜபக்சவிற்கு நடந்த நிலைதான் இங்கே உள்ள அரசியல் வாதிகளுக்கும் நடக்கும்”என்றார்.
