334 ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்திட வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், பணி காலத்தில் 10-க்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்படுத்திய 334 ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்திட வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 334 ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் வகையில் இராஜீவ் காந்தி பொது மருத்துவமனை பார்வை-2-ல் கண்டுள்ள கடிதத்தின் மூலம் ஒப்புதல் அளித்துள்ளார்கள்.
இக்கடிதத்தில், எதிவரும் 05/06/2024 முதல் 18/06/2024 வரை (சனி & ஞாயிறு நீங்களாக) ஒரு நாளைக்கு 33 ஓட்டுநர்கள் வீதம் 10 நாட்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும், இதில் 5 மருத்துவர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு. கண், காது, எலும்பு, இரத்த அழுத்தம், நீரிழிவு. தொண்டை, பொது மருத்துவ பரிசோதனை மற்றும் மனநல மருத்துவ பரிசோதனை ஆகியவை செய்யப்படும் எனவும், இதில் ஓட்டுனர்களுக்கு பரிசோதனைக்கு பின் தேவைக்கு ஏற்றவாறு மேலும் தேவைப்பட்டால் மேல் பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
எனவே, 334 பணியாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு இணைப்பில் கண்டுள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் அந்தந்த பணிமனைகளிலிருந்து தவறாமல் சென்னை, இராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, கட்டிடம்-3-ல் உள்ள Spine OP-க்கு காலை 9.00 மணிக்கு அனுப்பிடவும், அன்றய தினத்திற்கு மட்டும் வருகைப்பதிவு வழங்கிடவும் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.