விஏஓ கொலை வழக்கு – எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைப்பு
தூத்துக்குடி அருகே மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு நபரை பிடிப்பதற்காக எஸ்.பி. தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல் குறித்து புகார் அளித்ததால் அவரது அலுவலகத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ராமசுப்பிரமணியன் என்பவரை கைது செய்துள்ள போலீசார் மாரிமுத்து என்ற நபரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அவரை பிடிப்பதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் கொலை சம்பவத்தை கண்டித்து சென்னை தாம்பரத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல் தாராபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.