பார்ப்பனர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே சனாதனம்- திருமாவளவன்
பார்ப்பனர்களின் நலனுக்காக, பார்ப்பனர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒன்றே சனாதானம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், “இந்தியாவில் சாதி எதிர்ப்பு என்பது அம்பேத்கர் காலத்தில் தொடங்கியது, தமிழ்நாட்டில் பெரியார் காலத்தில் தொடங்கியது. பிரெஞ்சு புரட்சியின் போது எழுப்பப்பட்ட நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய 4 முழக்கங்கள் முக்கியமானவை. இந்தியாவைப் பொறுத்தவரை வெவ்வேறு வகையான ஆட்சி நிர்வாகம் இருந்தது, எல்லா சமஸ்தானங்களிலும் சாதிய நிலை ஒன்றாகத்தான் இருந்தது. சமூக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எந்த ஆட்சியாளரும் கருதவில்லை, ஆங்கிலேயரின் அரசாங்கத்தில் தான் சிறிய சிறிய மாற்றங்கள் ஏற்பட்டது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டுவந்தால் ஜனநாயக மாண்பை சீர்குலைந்து அதிபர் ஆட்சி முறைக்கு வித்திடும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஆதரிப்பதை தவிர அதிமுகவுக்கு வேறு வழி இல்லை. பாஜக கொண்டுவருவதால் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை அதிமுக ஆதரிக்கிறது.
சமத்துவம் என்பது தலித் மக்களுக்காக மட்டும் பேசும் அரசியல் அல்ல. ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் சமத்துவம் தேவை பாகுபாடு என்பதுதான் இந்து மதத்தின் ஆன்மாவாக இருக்கிறது; இந்த பாகுபாட்டைதான் சனாதனம் என்கிறோம். எல்லாவற்றிலும் மாற்றம் நிகழும் என்பது இயங்கியல், எந்த மாற்றமும் ஏற்படக் கூடாது என்பது சனாதனம். பார்ப்பனர்களின் நலனுக்காக, பார்ப்பனர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒன்றே சனாதானம்.” என்றார்.