கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 16,709 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இதனால் 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.40 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 11,729 கன அடியாக இருந்த நிலையில் இன்று 11,248 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நேற்று வினாடிக்கு 8605 கன அடியாக இருந்த நிலையில் இன்று 9,709 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் மைசூர் மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள கபிணி அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 84 அடியில் 83.66 அடியாக உள்ளது. கபிணி அணைக்கு நேற்று வினாடிக்கு 8025 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில் இன்று 8,702 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 15,605 கன அடியிலிருந்து 16,709 கனஅடியாக அதிகரித்துள்ளது.