மகளிர் உரிமை தொகை- விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் செப்.18-ம் தேதி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அண்ணா பிறந்தநாளான நேற்று முதல் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்ட விதிமுறைகளைப் பூர்த்திச் செய்த 1.06 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்றே அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1,000 செலுத்தப்பட்டுவிட்டது. பயனாளிகளுக்கு விரைவில் பிரத்யேக ஏடிஎம் கார்டு விநியோகிக்கப்படும் என்றும், ஒவ்வொரு மாதம் 15 ஆம் தேதியும் ரூ.1,000 செலுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிராகரிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பதாரர்களுக்கு செப்.18ம் தேதி முதல் குறுந்தகவல் அனுப்பப்படும் எனவும், 56.60 லட்சம் மகளிருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் இ- சேவை மையங்கள் மூலம் நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம். மீண்டும் விண்ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.