மொரோக்கோ நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 600ஐ தாண்டியது
மொராக்கோவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 632 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 329 பேர் காயமடைந்தனர்.
வட ஆப்பிரிக்கா நாடான மொராக்கோவின் மராகேஷ் நகரில் நேற்று இரவு 11:11 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் நிலநடுக்கம் ஏற்பட்ட 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி 632 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 329 பேர் காயமடைந்துள்ளனர்.
மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலநடுக்கம் அல்- ஹவுஸ், மர்ரகேஷ், ஓவர்சாசேட், அஜிலால், சிச்சாவ்வா மற்றும் தாரூடண்ட் ஆகிய மாகாணங்களில் உணரப்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கினர். நிலநடுக்கத்துக்கு பின்னர் மின்சாரம், தொலைப்பேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.