வடலூரில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


கடலூர் மாவட்டம் வடலூர் விருத்தாசலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 75 கிலோ பிரிவில் மேடை ஏற தயாராக இருந்த சேலம் மாவட்டம் பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சார்ந்த ஹரிஹரன் என்ற 21 வயது இளைஞர் மேடை ஏறுவதற்கு முன்பாக வாம் அப் செய்து கொண்டிருந்த பொழுது சம்பவ இடத்தில் மயக்கம் அடைந்ததாக தெரிகிறது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஹரிஹரன் போட்டியில் பங்கேற்பதற்காக அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி மேற்கொண்டதால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை செய்து வருகின்றனர்.
ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள தயாராக இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


