எஸ்.ஜே. சூர்யா ஆரம்பத்தில் ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதன்படி அஜித் நடிப்பில் வாலி திரைப்படத்தை இயக்கி தனது முதல் படத்திலேயே தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். அடுத்ததாக குஷி படத்தை இயக்கி வெற்றி கண்ட எஸ் ஜே சூர்யா நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை தானே இயக்கி நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பின்னர் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டிய எஸ் ஜே சூர்யா ஒரு கட்டத்தில் வில்லனாகவும் களமிறங்கி ஒரு கை பார்த்தார்.
அதன்படி ஸ்பைடர், மெர்சல், மாநாடு என அடுத்தடுத்த படங்களில் வில்லனாக நடித்து மிரட்டினார். அதன் பிறகு கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் வில்லனாக நடித்து திரையரங்கையை அதிர வைத்து நடிப்பு அரக்கனாக மாறினார். தொடர்ந்து கமல், விக்ரம், தனுஷ் போன்ற பல பெரிய ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார் எஸ் ஜே சூர்யா. மேலும் பல வருடங்களுக்குப் பிறகு கில்லர் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து பிசியான நடிகராக வலம் வரும் எஸ் ஜே சூர்யா அடுத்ததாக மலையாள மொழியிலும் என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்நிலையில் எஸ் ஜே சூர்யா இன்று (ஜூலை 20) தனது 56வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாமும் எஸ்.ஜே சூர்யாவை மனதார வாழ்த்துவோம்.
- Advertisement -