Homeசெய்திகள்ஆவடிஆவடியில் மீண்டும் அதே பகுதியில் திருடர்கள் கைவரிசை

ஆவடியில் மீண்டும் அதே பகுதியில் திருடர்கள் கைவரிசை

-

- Advertisement -

ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நள்ளிரவில் 8 கடைகளை உடைத்து ரூபாய் 56 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆவடி – பூந்தமல்லி சாலை, வசந்தம் நகரில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு ஆலோசனை மையம், துணிக்கடை, சலூன் கடை, அரிசி மண்டி கடை, புகைப்படம் நிலையம், கட்டுமான பொருட்கள் விற்பனையகம் உள்ளிட்ட கடைகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்து உரிமையாளர்கள் அனைவரும் கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். பின்னர் காலை அவர்கள் அனைவரும் திறக்க வந்த போது மேற்கண்ட 6 கடைகளில் இரும்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.

கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்கள் உள்ளே சென்று பார்த்த போது, 6 கடைகளில் ரூபாய் 27,800 ரொக்கப்பணம், கடையில் உள்ள பொருட்கள் ஆகியவை திருடு போய் இருந்தது தெரியவந்தது.

மேலும், இதன் அருகில் உள்ள பல்பொருள்கள் அங்காடியை உடைத்து ரூபாய் 13,400 ரொக்கப்பணமும், அதே பகுதியில் உள்ள மளிகை கடையை உடைத்து ரூபாய் 15 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, முகமூடி அணிந்த சில இளைஞர்கள் வந்து திருட்டு செயலில் ஈடுபட்டது மட்டும் அல்லாமல், அவர்கள் அங்கிருந்த விடியோ காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்கையும் உடைத்துச் தூக்கி சென்று இருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து கடைகளின் உரிமையாளர்கள் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் அருணாச்சலராஜா தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த வணிக வளாகத்தில் கடந்த அக்டோபர் மாதம், 6 கடைகளை உடைத்து, ரூபாய் 7 லட்சம் ரொக்கப்பணம், மடிக்கணினிகள், கேமரா ஆகியவை திருடு போனதும், அந்த வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.

MUST READ