அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக காரணம் இல்லை என்றும், அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்க கூடிய அளவிற்கு தான் பலவீனமாவன் இல்லை என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காமல் போனதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அளித்த அழுத்தம் தான் காரணம் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனிடம் விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்தார்.
விசிகவில ஆதவ் இருந்தாலும், அவர் துணை பொதுச்செயலாளராக இருந்தாலும், அவர் வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனத்தின் சார்பில் கலந்து கொண்டுள்ளதாகவும், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுன் பேசிய கருத்து அவருடைய சொந்த கருத்து. அதற்கு கட்சி பொறுப்பல்ல என்றும் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய், அம்பேத்கர் நினைவு நாளில் அவர் தொடர்பான நூலை வெளியிட்டிருப்பதும், அம்பேத்கரை குறித்து அவர் பேசி இருப்பதும் பெருமை அளிப்பதாகவும், இன்றைக்கு பொது நீரோட்டத்தில் அம்பேத்கர் வெகுவாக பேசப்படுகிறார். அந்த வரிசையில் விஜயும், விகடன் பதிப்பகத்தின் நூலை வெளியிட்டிருப்பது வரவேற்க தக்கது என்றும் திருமாவளவன் கூறினார். அந்த நிகழ்வில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தம் என்ற கருத்தை அவர் பதிவு செய்துள்ளதாகவும், விஜய் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் திருமா விளக்கம் அளித்தார்.

அப்படி எந்த அழுத்தமும் தனக்கு இல்லை என்பதை தெளிவு படுத்தியுள்ளதாகவும், அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்க கூடிய அளவக்கு தாமோ, அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியோ இல்லை என்றும் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்தார்.அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் என்பதை தான் சுதந்திரமாகதான் முடுவெடுத்ததாகவும் கூறினார்.
மேலும், உலகம் முழுவதும் தற்பொழுது மக்களாட்சி தான் நடைபெறுவதாகவும், மன்னராட்சி ஒழிக்கப்பட்டு பல காலங்கள் ஆவதாகவும் குறிப்பிட்ட திருமாவளவன், தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் நடைபெறுகிறது என்று உறுதிபட தெரிவித்தார்.