தலித் என்பது ஒரு சாதியின் பெயரல்ல. விரிந்த பார்வை இல்லாதவர்கள் தலித் என்ற சொல்லை புரிந்து கொள்ள முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்:-
1982 தமிழ்நாட்டுக்கு வந்து தலித் பேந்தர் இயக்கத்தை தொடங்கி வைத்தவர் ராம்தாஸ் அத்வாலே. இன்றைக்கும் இவரை ஒரு தலித் பேந்தராக தான் பார்க்கிறேன்.
தலித் என்ற சொல்லை இந்திய அரசியலுக்கு வழங்கிய இயக்கம் இவர்களின் இயக்கம். தலித் என்பது ஒரு சாதியின் பெயரல்ல. விரிந்த பார்வை இல்லாதவர்கள் தலித் என்ற சொல்லை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
இந்திய குடியரசு கட்சி என்பது அம்பேத்கர் கண்ட கனவு. இந்த குடியரசு கட்சியை நாங்களும், அவர்கள் எங்களையும் எதிரியாக பார்த்ததில்லை. 2019ல் எம்.பி ஆனதும் முதலில் நான் நேரில் போய் பார்த்தது ராம்தாஸ் அத்வாலே தான். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களையும் பெயர் சொல்லி அழைக்கக்கூடியவர் ராம்தாஸ் அத்வாலே என்றார்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.
தலித் பேந்தராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் வளம் வந்த காலம் நினைவில் இருக்கிறது. திருமாவளவன், தலித் பேந்தர் இயக்கத்தை விடுதலை சிறுத்தைகளாக மாற்றி பட்டிதொட்டி எல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறார்.
நாடு முழுக்க ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களை எம்.பி., எல்.எல்.ஏக்களாக உருவாக்கியிருக்கிறோம். அதுபோல் நீங்களும் தமிழ்நாட்டில் மழைவாழ் மக்களை எம்.பி உருவாக்க வேண்டும்.
பாஜக உடன் கூட்டணியில் நாங்கள் இருந்தாலும் எங்களின் கொள்கை வேறு. அவர்களின் கொள்கை வேறு. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திருமாவளவன் கொடுக்கும் அமைப்பு தான் இந்திய குடியரசு கட்சி.
மதுரை மண்ணில் நடந்த வட்டமேசை மாநாட்டில் என்னையும், ராமதாசையும் வைத்து மாநாடு நடத்தினார். திருமாவளவனுக்கு மிரட்டல் விடுத்தால் நான் அதை தூள் தூளாக்க எப்போதும் அவருடன் இருப்பேன்.
இன்று பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் கன்னியாகுமரி கடல் அருகில் அம்பேத்கரின் சிலையை வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடிதமாக கொடுத்துள்ளேன். திருமாவளவனும் இதை மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்த வேண்டும் என்றார்.