நோய் தீர்க்கும் சாறு வகைகளை பற்றி பார்க்கலாம்.
நம் வீட்டிலேயே இருக்கும் காய்கறி, பழங்களை வைத்து தயாரிக்கக்கூடிய சாறுகள் உடலுக்கு ஆற்றல் தருவதோடு மட்டுமல்லாமல் பலவிதமான நோய்களை எதிர்கொள்ளவும் உதவுகிறது. அதேசமயம் இது ஹார்மோன்களின் சமநிலைக்கும் உதவியாக இருக்கும். தற்போது என்னென்ன சாறு வகைகள் எதற்காக பயன்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
முருங்கைக்கீரை சாறு
சிறிதளவு முருங்கை இலை சாறு, இஞ்சி, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து குடித்து வர ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
வெள்ளரிக்காய் சாறு
வெள்ளரிக்காய் சாறுடன், புதினா இலைச் சாறு, சிறிதளவு உப்பு, எலுமிச்சை ஆகியவற்றை சேர்த்து குடித்து வந்தால் உடலில் உள்ள வெப்பம் தணியும். சிறுநீரகங்கள் சுத்தமாகும்.
இஞ்சி- பூண்டு சாறு
சிறிய அளவு இஞ்சி, மூன்று பல் பூண்டு ஆகியவற்றை எடுத்து அதிலிருந்து சாறு எடுத்து உப்பு, தேன் கலந்து குடித்து வர கல்லீரல் சுத்தமாகும், ஜீரண சக்தி மேம்படும்.
எலுமிச்சை சாறு
சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடல் எடையும் கட்டுக்குள் வரும்.
கேரட் – பீட்ரூட் சாறு
தினமும் கேரட் மற்றும் பீட்ரூட் சாறுடன் இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
நெல்லிக்காய் சாறு
நெல்லிக்காய், புதினா, இஞ்சியின் சாறு எடுத்து உப்பு , தேன் கலந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
தக்காளி சாறு
பசலைக்கீரை சாறு எடுத்து அத்துடன் தக்காளி சாறு, சிறிதளவு மிளகுத்தூளும் சேர்த்து குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தியும், இரும்பு சத்தும் அதிகரிக்கும்.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.