Homeசெய்திகள்கட்டுரைஜெகன் சிக்கியது இப்படித்தான்! ஏடிஜிபி காரில் ரூ.10 லட்சம்! அதிர்ச்சி பின்னணி!

ஜெகன் சிக்கியது இப்படித்தான்! ஏடிஜிபி காரில் ரூ.10 லட்சம்! அதிர்ச்சி பின்னணி!

-

- Advertisement -

திருவள்ளூர் சிறுவன் கடத்தல் விவகாரம் முழுக்க முழுக்க சொத்து தொடர்பானது. காதல் திருமணம் செய்த தனுஷ் அவர்கள் கையில் பிடிபட்டிருந்தால் அவரை கொலை செய்துவிட்டு, ஆணவக் கொலையாக மாற்றி இருப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

காதல் திருமண விவகாரத்தில் திருவள்ளூரை சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்டதன் பின்னணி குறித்தும், இந்த சம்பவத்தில் அதிமுக எம்எல்ஏ பூவை ஜெகனாதன், ஏடிஜிபி ஜெயராமனுடைய தொடர்பு குறித்தும் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- காதல் திருமண விவகாரத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் கட்டப் பஞ்சாயத்து செய்தது தொடர்பாக நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது. சிறுவன் கடத்தல் விவகாரத்தில் எப்.ஐ.ஆரில் ஒரு எம்.எல்.ஏ மற்றும் ஏடிஜிபிக்கு தொடர்புள்ள போதும் அவர்களின் பெயர்களை சேர்க்கவில்லை. அப்படி எப்.ஐ.ஆரில் சேர்க்கப்படாத  இருவர் தொடர்பாக தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

ஏடிஜிபி ஜெயராமன், அதிமுகவின் ஆதரவாளர் ஆவார். அதிமுக ஆட்சிக்காலத்தில் வடசென்னையின் இணை ஆணையராக பொறுப்பு வகித்திருக்கிறார். மத்திய மற்றும் தென்மண்டல ஐ.ஜியாக பொறுப்பு வகித்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் தேர்தல் சமயத்தில் அதிமுகவின் பணத்தை காவல்துறை வாகனத்தில் கடத்தினார் என்று நக்கீரனில் செய்திகள் வெளியிட்டிருந்தோம். கர்நாடகாவை சேர்ந்தவரான ஏடிஜிபி ஜெயராமன், எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். அவரை காப்பாற்ற, தற்போதைய டிஜிபி மிக கடுமையாக முயற்சி செய்தார்.

இந்த விவகாரம் ஏதே தேனி பெண்ணை, திருவள்ளூர் இளைஞர் காதல் திருமணம் செய்து விட்டார். அதை பிரிப்பதற்காக இவர்கள் சென்றார்கள் என்று நினைக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை. இது தமிழ்நாடு முழுவதும் நடைபெறக்கூடிய கட்டப் பஞ்சாயத்து சம்பவங்களின் தொடர்ச்சி ஆகும். அதற்கு காரணம் ஏடிஜிபி ஜெயராம் ஆவார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெயராமை, முக்கியத்துவம் இல்லாத பொறுப்புகளில் போட்டனர். தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால்தான், அவரை ஆயுதப்படைக்கு மாற்றினார். இவர் பெரிய அளவில் கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டார். அவருக்கு ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் மகேஸ்வரி என்பவர் உதவினார். சிறுவன் கடத்தல் வழக்கில், அவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மத்திய மாவட்டத்தை சேர்ந்த இவர், ஜெகன்மூர்த்தியிடம் இரவு 11 மணி முதல் 1 மணி வரை பேசினார் என்பதற்கான சிசிடிவி ஆதாரங்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏடிஜிபி ஜெயராமனும், பூவை ஜெகன்மூர்த்தியும் மணிக்கணக்கில் பேசினர். அதற்கான சி.டி.ஆர் விவரங்களை, வடக்கு மண்டல ஐ.ஜியான அஸ்ரா கார்க் என்கிற நேர்மையான காவல்துறை அதிகாரி வழங்குகிறார்.

ஓபிஎஸ் தன்னுடைய பினாமி பணத்தை தேனி மாவட்டத்தில் முதலீடு செய்துள்ளார். அவருக்கு வனராஜா என்கிற நபர் மிகவும் நெருக்கமானவர். வனராஜாவின் மகளை தான், திருவள்ளுர் இளைஞர் காதல் திருமணம் செய்துள்ளார். இந்த பெண்ணின் பெயரில் சுமார் ரூ.650 கோடி மதிப்பிலான ஓபிஎஸ்-ன் பணம் உள்ளதாக சொல்லப்படுகிறது. வனராஜாவின் மகள், இன்ஸ்டாகிராம் மூலம் திருவள்ளூரை சேர்ந்த தனுஷ் என்கிற இளைஞரை காதலித்து வந்துள்ளார். தனுஷுடன், அவர் திருமணத்திற்கு தயாராகியபோது, அவருக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்கின்றனர். இதனை அறிந்த பெண் வீட்டில் இருந்து வெளியேறி கடந்த ஏப்ரல் 15ம் தேதி தனுஷை திருமணம்  செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், திருவாலங்காடு காவல் நிலையத்திலும் சென்று பாதுகாப்பு கேட்கின்றனர்.

வனராஜா மகளின் மீது பெரிய அளவில் சொத்துக்கள் இருப்பதால் நாளைக்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்களை பிரிக்க முயற்சிக்கிறார்கள். இந்த விவகாரம் கட்டப்பஞ்சாயத்து செய்வதற்காக ஜெயராமிடம் வருகிறபோது, பூவை ஜெகன்மூர்த்தியிடம் பேசுகிறார். இதனை தொடர்ந்து, அவர்களை தூக்கிக்கொண்டு வர வேண்டும் என்று ஆட்களை அனுப்பினார். வீட்டில் தனுஷ் இல்லாததால், அவரது 17 வயது தம்பியை தூக்கி வருகிறார்கள். இது குறித்து தனுஷின் தாயார் காவல் துறையில் புகார் அளிக்கிறார். காவல்துறையினர், உடனடியாக வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்கிற்கு தகவல் தெரிவித்தனர்.

சிறுவனை கடத்த வந்த கார்களில் ஒன்றில் ஏடிஜிபி ஜெயராமனுக்கு சொந்தமான காவல்துறை வாகனமாகும். அந்த காரை ஓட்டியவரும் காவல்துறையை சேர்ந்தவர் ஆவார். இந்த வழக்கு ஒரு ஏடிஜிபி, எம்.எல்.ஏ, வழக்கறிஞர், கட்டப்பஞ்சாயத்து நபர் என எல்லாரும் தொடர்புடையதாகும். தனுஷின் சகோதரர், அவர்கள் இருக்கும் இடத்தை கூறியிருந்தால் 2 பேரையும் கடத்திச்சென்று, மாப்பிள்ளையை கொன்று இருப்பார்கள். தனுஷின் தாயார் புகார் அளித்த உடன் ஐ.ஜி அஸ்ரா கார்க் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். இதனால் சிறுவனை, மீனம்பாக்கத்தில் இறக்கி விட்டு செல்கிறார்கள். அங்கிருந்து சிறுவன் வீட்டிற்கு திரும்பிவிட்டார். எனினும் சிறுவனை கடத்தியது யார் என்று விசாரிக்கிறபோது, அவர் ஏடிஜிபி ஜெயராமன் காரில் கடத்தப்பட்டது தெரிய வருகிறது. யார் ஆட்களை அனுப்பியது என்று விசாரிக்கிற போது பூவை ஜெகன்மூர்த்திதான் அனுப்பினார் என்பது தெரியவருகிறது. மகேஸ்வரியும், சொத்து விவகாரம் தொடர்பாக பெண்ணை கடத்த முயற்சித்ததாகவும், ஏடிஜிபி ஜெயராமன் பேசியதால், பூவை ஜெகன்மூர்த்தி ஆட்களை அனுப்பவைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஐ.ஜி. அஸ்ரா கார்க், ஜெகன்மூர்த்தியிடம் விசாரிக்க டிஎஸ்பி தலைமையில் குழுவை அமைத்தார். இதனை அறிந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களை வீட்டிற்கு அழைக்கிறார். இதனை நீதிபதி கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறார். சிறுவன் கடத்தல் விவகாரத்தில் எம்.எல்.ஏ, ஏடிஜிபிக்கு தொடர்புள்ளது என்று தெரிகிறபோது, அவர்கள் மீது ஏன் எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. யாரை காப்பாற்ற வழக்குப்பதிவு செய்யவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது ஒரு பெரிய சதித் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். தமிழ்நாடு முழுக்க காவல்துறையில் என்ன நடக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். இந்தியாவில் ஏடிஜிபி அளவிலான அதிகாரியை நீதிமன்றம் குற்றவாளி என கூறி கைதுசெய்ய உத்தரவிட்டது இதுதான் முதன்முறையாகும். அவர் கைதானதற்கு பின்னர் உள்துறை செயலாளர் அவரை சஸ்பெண்ட் செய்தார்.

எடப்பாடி பழனிசாமி, ஒரு தலித் எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அறிவிக்கை விடுகிறார். ஆனால் குற்றத்தில் ஈடுபட்டது ஒரு அதிமுக எல்எல்ஏ மற்றும் எடப்பாடிக்கு நெருக்கமான ஏடிஜிபி ஆவார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ். அவருடைய சொத்து விவகாரம் தொடர்பாக தான் இது நடைபெறுகிறது. இதுதான் இந்த சம்பவத்தில் உண்மையில் நடைபெற்றதாகும். இது அந்த பெண்ணுக்கே தெரியாது. தனுஷ், மாட்டி இருந்தால் அவரை கடத்திச்சென்று கொலை செய்திருப்பார்கள். இது ஆணவக் கொலையாக மாற்றப்பட்டிருக்கும். அதற்கு பின்னால் இருக்கும் ஏடிஜிபி, எம்எல்ஏ போன்ற யாரும் தெரிந்திருக்க மாட்டார்கள், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ