ஆண்டுக்கு 3 ஆயிரம் செலுத்தி 200 பயணங்கள் வரை கட்டணமின்றி சுங்கச்சாவடிகளை கடக்கும் திட்டம் ஆகஸ்ட் 15ல் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள மக்கள் அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு செல்லக்கூட சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தனர். இதனையெல்லாம் நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் புதிய திட்டத்தை தயார் செய்து வருவதாக சமீப மாதங்களுக்கு முன்னர் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்த நிலையில் இன்று அத்திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதன்படி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், NHAI மற்றும் MORTH உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் ஆண்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பாஸ் ஒன்றை பெற்று கொள்ளலாம் எனவும், இதன் வேலிடிட்டி 1 ஆண்டு அல்லது 200 பயணங்கள் என தெரிவித்துள்ளார். அதாவது, அடிக்கடி தனி நபர் வாகனங்களை பயன்படுத்துவோர் நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளில் 200 முறை கடக்க முடியும், அதற்கு மேல் கடக்க மீண்டும் 3,000 ரூபாய்க்கு பாஸ் பெற்று கொள்ள வேண்டும். ஒருவேளை 200 முறை சுங்க சாவடிகளை கடக்கவில்லை என்றால் அதன் வேலிடிட்டி 1 ஆண்டுகள் எனவும் அதன் பிறகு அவை காலாவதி ஆகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை வாகனம் அல்லாத தனி நபர் வாகனங்களுக்கான இத்திட்டம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 78-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்று முதல் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.