திசையன் விளையில் ஆசிரியையிடம் 11 பவுன் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திசையன்விளை காந்திஜி தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் தான் வசித்து வரும் காந்திஜி தெருவிலிருந்து உலக ரட்சகர் ஆலசவயத்தில் நடைபெற்ற அசன விருந்தில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென எதிரே ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த வாலிபர், ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்து சென்றார். உடனே ஆசிரியை சித்ரா கூச்சலிடவே அப்பகுதியில் மக்கள் திரண்டதால் பைக்கில் வந்த மர்மநபர் உடன்குடி மெயின்ரோடு வழியாக பைக்கில் தப்பி சென்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காந்திஜி தெருவில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் உத்தரவின் பேரில், வள்ளியூர் டிஎஸ்பி., வெங்கடேஷ் மேற்பார்வையில், திசையன்விளை இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் ஆசிரியை சித்ராவிடம் நகைபறித்து தப்பி சென்றது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த அலெக்ஸ் ராஜன் (36) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று அலெக்ஸ் ராஜனை கைது செய்து 11 பவுன் நகையை மீட்டனர்.