திருக்கோவிலூர் அருகே சொகுசு காரின் டயர் வெடித்து விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

விழுப்புரம் அயுதப்படை காவலர் மாதவன் (44) என்பவர் இன்று காலை தனது குடும்பத்துடன் சொகுசு காரில் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தார். திருக்கோவிலூர் அருகே உள்ளத அத்திப்பாக்கம் பகுதியில் சென்றபோது திடீரென காரின் டயர் வெடித்ததாக சொல்லப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆயுதப்படை காவலரின் உறவினர்கள் சங்கீதா(38), சுபா (55), தனலட்சுமி (70) மற்றும் ராகவேந்திரன்(20) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் மாதவன் உள்ளிட்ட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலூர்பேட்டை போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.