கரூர் சம்பவத்தால் விஜயின் ஜனநாயகன் படத்துக்கு அடுத்தடுத்த சிக்கல் வந்துள்ளது.
கடந்தாண்டு வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் விஜய், ‘ஜனநாயகன்’ படம் தான் தன்னுடைய கடைசி படம் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆகையினால் இந்த படத்தை திருவிழா போல் கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், முன்னோட்ட வீடியோவும், ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 9 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் இந்த மாதம் முதல் வாரத்தில் ‘ஜனநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி படக்குழுவினரும் வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாடலை வெளியிட திட்டமிட்டு இருந்தனராம். ஆனால் அண்மையில் கரூரில் நடந்த சம்பவம் பெரும் பேசும் பொருளாகியுள்ள நிலையில் ‘ஜனநாயகன்’ படக்குழு முதல் பாடலை தற்போதைக்கு ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே இதன் முதல் பாடல் வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் கரூரில் நடந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் விஜயை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆதலால் மலேசியாவில் நடைபெற இருந்த ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு விஜயின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸுக்கும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.