
கிரிப்டோ கரன்சி முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி பல கோடி மோசடி செய்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கதான் செய்வார்கள் என்னும் கூற்று போல, காலம் காலமாக மோசடிகளும், ஏமாற்று வேலைகளும் அரங்கேறிய வண்ணமே உள்ளன. காலத்திற்கு ஏற்ப நவீன முறையில் , டிஜிட்டல் வழிகளில் மோசடிகள் நவீனமடைந்துள்ளதே ஒழிய ஏற்றுவதோ, ஏமாற்றப்படுவதோ முடிவுக்கு வந்தபாடில்லை. பொருளாதார ரீதியாக எப்படியாவது தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, நடுத்தர வர்க்கத்தினர் பலர் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர்.
அந்தவகையில் கோவையை சேர்ந்த ஹேமந்த் பாஸ்கர் உள்ளிட்ட குழுவினர் GROKR என்ற செயலி மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் ஈட்டலாம் என வாட்ஸ் அப் மூலம் தவலை பரப்பியுள்ளனர். இதை நம்பி முதலீடு செய்ய முன் வந்த நபர்களை தனியாக வாட்ஸ் அப் குழுவில் சேர்த்துள்ளனர். பின்னர் தனித்தனியாக URL அனுப்பி GROKR என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தி, ஒவொருவருக்கும் தனி log in ஐடியை கொடுத்துள்ளனர். மேலும் அமெரிக்கா நிறுவனம் என்பதால் பணத்தை டாலரில் முதலீடு செய்ய வேண்டும் என்றும், புதிய உறுப்பினர்கள் 1,000 டாலர் முதல் 3,000 டாலர் வரை முதலீடு செய்ய வேண்டும் என மோசடி கும்பல் அறிவுறுத்தியுள்ளது. ஆரம்பத்தில் லாபத்தை டாலராகவே அதே செயலியில் மோசடி கும்பல் கொடுத்துள்ளது. அவ்வாறு கொடுக்கும் பணத்தையும் செயலியில் இருந்து எடுக்க விடாமல், மீண்டும் மீண்டும் முதலீடு செய்யவே வலியுறுத்தியுள்ளனர். இதனால் அதிகம் லாபம் வருவதாக எண்ணி நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும் பலர் இந்த செயலியில் முதலீடு செய்துள்ளனர்.

மேலும் உறுப்பினராக உள்ளவர்கள் தங்களுக்கு கீழ் 25 ஆட்களை சேர்த்தால் 100 டாலர், 25 – 75 ஆட்களை 500 டாலர், 75-185 ஆட்களை சேர்த்தால் 1200 டாலர் கூடுதலாக கிடைக்கும் என 7 நிலைகளை அறிவித்துள்ளனர். மேலும் புதிதாக இணைய விரும்பும் மக்களை பெரிய உணவகங்களுக்கு அழைத்து உணவு விருந்து அளிப்பது என உண்மையாகவே செயல்படும் நிறுவனம் போல அனைத்தையும் செய்துள்ளனர். இதை நம்பி ஏராளமான மக்கள் இந்த செயலியில் முதலீடு செய்த நிலையில், அவ்வப்போது புதிய ஸ்கீம்கள் எனக் கூறி கூடுதலாக மூதலீடு செய்ய வைத்துள்ளனர். இறுதியாக லாபத்துடன் தங்க நெக்லஸ் மற்றும் செயின் வழங்க உள்ளதாக கூறி முன்னதாக குழு தலைவர்களுக்கு தங்க நகைகளை வழங்கியுள்ளனர். இதனால் திடிரென ஏராளமான பெண்கள் இணைந்துள்ளனர். மேலும் அவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து விட்டுள்ளனர்.
இந்நிலையில் திடிரென செயலியை log in நிறுத்தப்பட்டு, செயலியை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் வாங்கி முதலீடு செய்தவர்கள் பணத்தை எடுக்க முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஹேமத் பாஸ்கரை தொடர்பு கொண்ட போது ஏதும் செய்ய முடியாது என கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்துள்ளனர். தங்களது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.