மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாமக நிறுவனர் ராமதாஸ், வரும் 12ம் தேதி வரை ஓய்வில் இருப்பார் என்பதால் பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து என கட்சி தலைமை அறிவித்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றனர். இந்நிலையில் சிகிச்சைப்பிறகு பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால், யாரும் சந்திக்க வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் மருத்துவ பரிசோதனை முடிந்து நேற்று (7.10.2025) மாலை மருத்துவமனையில் இருந்து ( டிஸ்சார்ஜ் ஆகி ) நலமுடன் வீடு திரும்பியுள்ளார். மருத்துவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டதின் பேரில், மருத்துவர்கள் அறிவுறுத்தல் படி 12.10.2025 வரை ஒய்வு எடுக்க உள்ளார். எனவே மருத்துவர் அய்யா அவர்களின் பார்வையாளர் சந்திப்பு 12.10.2025 வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் மருத்துவர் அய்யாவை சந்திக்க விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருகின்ற 13.10.2025 திங்கள்கிழமை முதல் வழக்கம் போல் தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை நேரடியாக சந்திக்கலாம். 12 மணிக்கு மேல் பார்வையாளர்கள் சந்திப்பு இல்லை என்பதும் அறிவுறுத்தப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.