200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்
சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கற்சிலைகள் சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, “சென்னை ஆர்.ஏ.புரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 55 சிலைகளும் கோயிலிலிருந்து திருடப்பட்டவை. கடந்த 2 ஆண்டுகளில் மீட்கப்பட்ட 307 சிலைகளை உரிய கோயில்களில் ஒப்படைத்துள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட 55 சிலைகள் 200 ஆண்டுகள் பழமையானவை. ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட அனுமன் சிலையையும் சென்னை போலீசார் மீட்டுள்ளனர்.

1,541 சிலைகளை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் உதவியால் 64 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிலைகள் சம்பந்தப்பட்ட கோயில்கள், ஊர்மக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 13 சிலைகள் கோயில்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன” எனக் கூறினார்.