வங்கதேசத்தில் மாணவர் தலைவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் பத்திரிகை அலுவலகங்ளுக்கு தீவைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசினா விலகினார். மாணவர் போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி. இவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 12ஆம் தேதி டாக்காவில் உள்ள மசூதியிலிருந்து வெளியே வந்த ஹாடி மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் படுகாயமடைந்த அவர் விமானம் மூலம் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று ஹாடி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இன்று அதிகாலையில் டாக்காவில் வன்முறை வெடித்தது. ஹாடியின் மரணத்திற்கு நீதி கோரியும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவின் கவ்ரான் பஜாரில் உள்ள ‘தி டெய்லி ஸ்டார்’ செய்தித்தாள் அலுவலகத்திற்குள் நுழைந்த கும்பல், அலுவலகத்தை சூறையாடியதுடன் கட்டிடத்திற்கும் தீவைத்தனர். இதனால் அங்கு 25 பத்திரிகையாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில், அவர்கள் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். முன்னதாக, போராட்டக்காரர்கள் வங்கமொழி நாளிதழான ‘புரோதோம் அலோ’ அலுவலகத்தைத் தாக்கி தீ வைத்தனர். அத்துடன் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரகுமானின் வீட்டையும் போராட்டக்கார்கள் தீவைத்தனர். இதனால் வங்கதேசத்தில் பதற்றம் நிலவி வருகிறது.


