தேர்தலில் வெற்றி பெறப்போகிறவர்கள் மட்டுமே பொருளாதார நிலையை ஆராய்ந்து பொறுப்புடன் வாக்குறுதிகளை அறிவிப்பார்கள் என்றும், வெற்றி பெறாதவர்கள் எதை வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சித்துள்ளாா்.
சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் இறுதி கட்ட பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு மண்டபங்கள் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். அந்த வகையில் திரு.வி.க. நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் இந்த திருமண மண்டபத்திற்கு, “அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை” என முதலமைச்சர் பெயர் சூட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த மண்டபத்தின் ஒருநாள் வாடகை ரூ.75,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், வருகிற 29ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சேகர்பாபு, ”திமுகவின் தேர்தல் அறிக்கையை முன்வைத்தே அதிமுக அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகக் கூறினார். இதை மக்கள் கூர்ந்து கவனித்து வருவதாகவும், எடப்பாடியின் அறிவிப்புகள் குறித்து திமுகவோ மக்களோ கவலைப்படவில்லை என்றும் தெரிவித்தார். திமுகவின் பணி மக்களின் பணி என்றும், திமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க மக்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலீடுகளில் பின்னோக்கி செல்கிறது என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், ஆளுநரின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்கள் தமிழகத்தில் எடுபடாமல் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்றும், ஆனால் தமிழகம் முன்னோக்கி தான் பயணித்து வருகிறது என்றும் வலியுறுத்தினார்.
வருகிற 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சேகர்பாபு, தேர்தல் வருகிற காலங்களில் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு அடிக்கடி வருவதை எதிர்பார்க்கலாம் என்றார். மோடி ஒருபுறம், அமித்ஷா மறுபுறம், ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையே தமிழகத்திற்கு படையெடுத்தாலும், இரும்பு மனிதராக நின்று தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் முதல்வராக ஆவது எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மோடி வருகை: குழப்பத்தில் என்டிஏ! ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!


