எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தால் கடும் அமளி ஏற்ப்பட்டது. இந்தன காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இரண்டாவது நாளாகவும் லோக்சபாவில் சலசலப்பு அதிகரித்தது. இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

நேற்றும் இதே விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அமளி நீடித்தது. இதையடுத்து, சபாநாயகர் அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதற்கிடையே, 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். குறிப்பாக, திமுக எம்.பி. டி.ஆர். பாலு, இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
