தாயின் சடலம் ஜிப்மர் மருத்துவமனையில் இருக்கும் போது +2 பொதுத்தேர்வினை மனுஸ்ரீ என்ற மாணவி எழுதினாா். சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு மாணவிக்கு இவா் ஒரு எடுத்துக்காட்டாகும்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள, வசந்தவாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். விவசாயியான இவருக்குக் கற்பகம் என்ற மனைவியும், மனுஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். மனுஸ்ரீ மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தாய் கற்பகம், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தாயின் மறைவுச் செய்தி கேட்டு மாணவி மனுஸ்ரீயும் அவரது குடும்பத்தினரும் ஆழ்ந்த துயரத்திக்கு உள்ளாகினர்.
இன்று தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், மனுஸ்ரீ இன்று தனது முக்கியத் தேர்வை எழுத வேண்டிய சூழல் இருந்தது. ஒருபுறம் தன் ஆருயிர்த் தாயின் மறைவு வாட்டியெடுத்தாலும், மற்றொரு புறம் தனது மகள் படித்துப் பெரிய ஆளாக வேண்டும் என்ற தனது தாயின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற வைராக்கியம் அவரிடம் இருந்தது. தனது தந்தையின் ஆறுதலோடும், மன உறுதியோடும் கண்ணீரை அடக்கிக்கொண்டு, மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு மனுஸ்ரீ தேர்வு எழுத சென்றுள்ளாா்.

தாயின் உடல் மருத்துவமனையில் இருக்கும் போதே, கனத்த இதயத்துடன் தேர்வு எழுத வந்த மாணவியைக் கண்டு அங்கிருந்த ஆசிரியர்களும் சக மாணவிகளும் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியடைந்தனர். மாணவியின் முகத்தில் தெரிந்த அந்தப் பெரும் சோகத்தையும் மீறி, அவர் காட்டிய கடமை உணர்வு அனைவரையும் வியக்க வைத்தது. “பெற்ற தாயை இழந்த துயரத்தை விடப் பெரிய வலி உலகில் எதுவுமில்லை, அந்த நிலையிலும் தனது லட்சியத்திற்காகத் தேர்வு எழுத வந்த மனுஸ்ரீயின் துணிச்சல் பாராட்டுக்குரியது” என ஆசிரியர்கள் உருக்கத்துடன் தெரிவித்தனர்.
தாய் இறந்த சில மணி நேரங்களிலேயே தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதிய மாணவி மனுஸ்ரீயின் செயல், கல்வி மீதான அவரது அக்கறையையும், அவரது தாயின் கனவைச் சுமந்து நிற்கும் போக்கையும் காட்டுகிறது. சோகத்தை மறைத்து சாதனை படைக்கத் துடிக்கும் இந்த மாணவிக்கு அப்பகுதி மக்களும் சமூக வலைதளங்களில் பலரும் தங்களது ஆறுதல்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இக்கட்டான சூழலிலும் மனுஸ்ரீ காட்டிய இந்த மன உறுதி, மற்ற மாணவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.


