புரட்சி பாரதம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோர் மீதான கடத்தல் வழக்கை ரத்து செய்ய காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் மனுதாரா் வழக்கை திரும்ப பெற முன்வந்ததை தொடர்ந்து நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.
திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக தனுஷின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே வி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி, கூடுதல் டி ஜி பி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி பெண்ணின் தந்தை வனராஜ் உள்ளிட்ட மூவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தங்களுக்குள் சமரசம் ஏற்பட்டு விட்டதாக மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், வழக்கை ரத்து செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கு தீவிரமான வழக்கு என்றும் வழக்கை ரத்து செய்ததால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று வாதிட்டார்.
மக்கள் பாதுகாப்பு தொடர்புடையது, ரத்து செய்தால் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்றும் இந்த வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளனர் எனவே சமரசத்தை அனுமதிக்க முடியாது. வழக்கை ரத்து செய்யக் கூடாது வழக்கை விசாரித்து முடிக்க அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்ப பெற அனுமதி கேட்டதால் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.
