சென்னையில் தேர்தலை முன்னிட்டு சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், வருமானவரித்துறை பயன்படுத்தும் வாடகை வாகனங்கள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.


சென்னை தி.நகரைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் செயற்பாட்டாளர் சங்கர், ஆயிரம் விளக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடமும் பாண்டிபஜார் காவல் நிலையத்திலும் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், வருமானவரித்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் வாடகை கார்கள் மூலம் தேர்தல் நேரத்தில் சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் முயற்சிகளை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படையினரின் தீவிர சோதனைகள் நடைபெற்று வரும் போதிலும், சிலர் விதிகளை மீறி பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
சங்கர் தனது புகாரில், வருமானவரித்துறை மற்றும் அதன் புலனாய்வு பிரிவுக்காக 1500-க்கும் மேற்பட்ட வாடகை வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார். ஆனால் விதிமுறைகளுக்கு முரணாக மஞ்சள் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு பதிலாக வெள்ளை பதிவெண் கொண்ட தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவற்றில் “வருமானவரித்துறை” என்ற பெயர்ப்பலகைகள் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வாகனங்களில் சில போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு வழக்குகளுக்கும் உள்ளாகியுள்ளதாகவும், தேர்தல் காலத்தில் இவ்வாறான வாகனங்கள் மூலம் பணம் விநியோகிக்கப்படுவதாகவும் சங்கர் கூறியுள்ளார். தானே சில வாகனங்களை பின்தொடர்ந்து கண்காணித்து இதை கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் தங்களை உயர் அதிகாரிகள் போல காட்டிக்கொண்டு சட்டவிரோத பண விநியோகத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், வருமானவரித்துறை வாகனங்களுக்கும் சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்தி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
