டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக விசாரணையை DGCA தொடங்கியது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் முனையம் ஒன்றில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் B737-700 ரக விமானமும் – அகாசா ஏர் நிறுவனத்தின் B737 MAX 8 ரக விமானமும் தரையில் நகர்ந்து செல்லும் (taxiing) போது, ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் வலது புற இறக்கை நுனி (winglet), அகாசா ஏர் விமானத்தின் இடதுபுற இறக்கையுடன் மோதியது. இதில் இரு விமானங்களின் இறக்கைகள் சேதமடைந்த நிலையில், ஆய்வு மற்றும் சீரமைப்புப் பணிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டத் தகவல்களின்படி, அகாசா ஏர் விமானம் பின்னோக்கித் தள்ளப்பட்டு (pushed back), இயந்திரங்களை இயக்கும் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அருகே காத்திருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம், அகாசா ஏர் விமானத்திலிருந்து போதுமான இடைவெளி இருப்பதை விமானி உறுதிப்படுத்திய பிறகு, விமானம் நகர்ந்து செல்ல விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தால் அனுமதிக்கப்பட்டது. இந்த நகர்வுச் செயல்பாட்டின் போது, Spice Jet விமானம் ‘விங் வாக்கர்’ (wing walker) எனப்படும் தரைவழி வழிகாட்டியின் அனுமதியின்றித் திரும்பியதே இந்த மோதலுக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், இந்த விபத்து குறித்த தரைவழிச் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணை முடியும் வரை, ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் விமானிகள் மற்றும் சம்பந்தப்பட்ட விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்தச் சூழலைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், பாதுகாப்புத் தரங்களைப் பேணவும், இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
தேசப்பற்று பற்றி நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம் – தொகுதி மறுவரையறையை ஆதரித்து பிரதமர் மோடி பேச்சு
