திராவிட முன்னேற்ற கழகம்” டோக்கன் அரசியல் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக சசிகலா விமர்சித்துள்ளாா்.
![]()

ஆவடி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் வி.கே. சசிகலா, திமுக அரசையும் அதன் தேர்தல் வாக்குறுதிகளையும் கடுமையாக விமர்சித்தார். தனது புதிய அரசியல் முயற்சியாக தொடங்கியுள்ள கட்சியின் வேட்பாளர் பக்தவச்சலத்தை ஆதரித்து பேசுகையில், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் இலவச வாக்குறுதிகளை அதிகமாக வழங்கி வருவது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது என சசிகலா கூறினார். “8 ஆயிரம் ரூபாய் டோக்கன் கொடுக்கிறோம் என்கிறார்கள். அந்த தொகையில் ஒரு குடும்பம் முழுமையாக பொருட்கள் வாங்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், கல்வி முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், மின்சாரத் துறையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல்கள் உள்ளன என்றும் குற்றம்சாட்டினார். மின்சாரத் துறையில் ஒப்பந்த பணிகள் அதிகரித்து வருவதால், அனுபவமற்றவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்; இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
திமுக அரசு “டோக்கன் அரசியல்” மீது நம்பிக்கை வைத்து, அதன் மூலம் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது என சசிகலா விமர்சித்தார். அரசின் வருவாய் மற்றும் செலவுகளை குறிப்பிட்ட அவர், வருடத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டிய நிலை உள்ளதுடன், அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவுகளும் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் நலத்திட்டங்களுக்கு போதிய நிதி இல்லை என்றார். இந்நிலையில் இலவச திட்டங்களுக்கு பணம் எங்கிருந்து வரும் எனவும் கேள்வி எழுப்பினார்.
ஆவடி தொகுதியைச் சேர்ந்த திமுக அமைச்சரை மக்கள் எளிதில் அணுக முடியவில்லை என்றும், கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கான பணிகள் செய்யப்படவில்லை என்றும் சசிகலா குற்றம்சாட்டினார். இதேபோல், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் நம்பகமற்றவை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சியில் காவல்துறைக்கு சிக்கல்கள் அதிகரித்துள்ளதுடன், மின்வாரியத்தில் கூடுதல் கட்டண வசூல் மற்றும் வாகன அபராதங்கள் மூலம் மக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். குறிப்பாக, சென்னை நகரில் மட்டும் தினசரி அபராதமாக பெருமளவு தொகை வசூலிக்கப்படுவதாகவும் சசிகலா தெரிவித்தார்.
“அம்மா ஆட்சியில் இப்படிப்பட்ட நிலை இல்லை. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.
விஜய் அதிக வாக்குகள் வாங்கினால் அது திமுகவிற்கு சாதகமாக அமைய வாய்ப்பு
