ஆளுநர் ரவிக்கு 7 முறை கடிதம் அனுப்பப்பட்டது- மா.சு.
சித்த மருத்துவ பல்கலை. மசோதாவுக்காக ஆளுநர் ரவிக்கு 7 முறை சட்டத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்த பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார். பல்கலைக்கழக மானியக்க்குழு விதிகளுக்கு எதிராக சித்தா பல்கலைக்கழக மசோதா இருப்பதாவும் ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு எதிரானதாக சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா இல்லை என விளக்கம் அளித்துள்ளார். சித்த மருத்துவ பல்கலை. மசோதா குறித்து ஆளுநரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சித்த மருத்துவ பல்கலை. மசோதாவுக்காக ஆளுநர் ரவிக்கு 7 முறை சட்டத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாசு அளித்துள்ள விளக்கத்தில், “2022 மே மாதம் 5 ஆம் தேதி சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக சட்டத்துறையால் அனுப்பப்பட்டது. 2022 ஏப்ரல் 28 ஆம் தேதி சித்த மருத்துவ சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சித்தா பல்கலைக்கழகத்துக்கு மாதவரம் பால் பண்ணையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலை மசோதா 14 ஏப்ரல் 2022-ல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1,136 கோடியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் சித்த மருத்துவ பல்கலை. மசோதா பல்கலை. மானியக்குழு (UGC) விதிமுறைகளுக்கு எதிராக இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்காக மே 15 முதல் 25 வரை உடல் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக கூறியுள்ள அமைச்சர் மா.சு, ஹஜ் பயணம் செய்வோர் வசதிக்காக 19 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒன்றிய அரசிடம் இருந்து 7,000 தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.