இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை சஞ்சிதா உகலே உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சஞ்சிதாவின் தந்தை மச்சிந்திரா உகலே சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
மும்பையில் வசித்து வந்த சஞ்சிதா, ஜூன் 14 ஆம் தேதி தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய அவரது தந்தை, கடந்த சில மாதங்களாக சஞ்சிதா மன உளைச்சலுடன் காணப்பட்டதாக கூறினார். இருப்பினும், அதற்கான காரணத்தை அவர் குடும்பத்தினரிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். சில நேரங்களில் மகிழ்ச்சியாக இருந்தாலும், திடீரென மனச்சோர்வுக்கு ஆளாகும் பழக்கம் அவரிடம் இருந்ததாகவும் அவர் கூறினார். அந்த மாற்றத்தை கவனித்த குடும்பத்தினர், சஞ்சிதாவை தனியாக விடாமல் எப்போதும் யாராவது ஒருவர் உடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டதாகவும், சம்பவம் நடந்த நாளில் சுமார் அரை மணி நேரம் அவர் தனியாக இருந்தபோது இந்த துயரச் சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், பணம் மற்றும் தொழில் தொடர்பான சில பிரச்சனைகள் காரணமாக சஞ்சிதா நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த அவர், தனது மகளின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனிடையே, சீரியல் துறையில் பணிபுரியும் சிலர் சஞ்சிதாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாக அவரது சகோதரர் ஆகாஷ் உகலே குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக உண்மை வெளிவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சஞ்சிதா உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புவரை சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டிருந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, அவர் வெளியிட்ட கடைசி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தனிமையில் இருக்காமல் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவது முக்கியம் என நடிகை ஆன்சல் குரானா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ முதல் பாடல் விரைவில் வெளியீடு… ஜி.வி. பிரகாஷ் அறிவிப்பு!
