கரூர் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தல்.
”அரசு நெய்யில் ‘ஸ்வீட்’ செய்யக் கூடாது” என்று முதலமைச்சர் விஜய்யின் பழைய தேர்தல் பிரச்சார டயலாக்கை வைத்தே, அவரைப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், கரூரில் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நாளை அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் விஜய் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், தற்போது டாக்டர் கிருஷ்ணசாமியும் விஜய்யின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விஜய்யின் டயலாக்கையே ஆயுதமாக்கிய கிருஷ்ணசாமி
கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, கருணாநிதி சிலை வைக்கும் விவகாரத்தை விமர்சித்துப் பேசிய விஜய், “மக்களுடைய வரிப்பணத்தில் யாருக்குப் புகழ் பாட நினைக்கிறீங்க? ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க” என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி திமுக-வைத் தாக்கியிருந்தார். தற்போது அதே பாணியில் விஜய்யைச் சாடியுள்ள கிருஷ்ணசாமி, தவெக-வின் சொந்தக் கட்சிப் பிரச்சாரத்தில் நடந்த விபத்திற்குப் பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு வேலைகளை வாரி வழங்குவது எந்த விதத்தில் நியாயம்? இது ‘அரசு நெய்யில் ஸ்வீட் செய்யும் கதை’ இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
”சாட்சிகள் கலைக்கப்படும்; நீதி கிடைக்காது” – கிருஷ்ணசாமி காரசாரம்
இதுதொடர்பாக டாக்டர் கே.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற விஜய் அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் கண்காணிப்பில் தற்போது சிபிஐ (CBI) விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஆதவ் அர்ஜுனா உட்படப் பலரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் இந்த வழக்கின் மிக முக்கியச் சாட்சிகளாக உள்ளனர். இப்படியிருக்க, அவர்களுக்குத் தற்போது அவசர அவசரமாக அரசு வேலை வழங்கப்பட்டால், அவர்களால் நீதிமன்றத்தில் நேர்மையான சாட்சியங்களை வழங்க முடியாது. அவர்கள் அனைவரும் ‘பிறழ் சாட்சிகளாக’ (Hostile Witnesses) மாறிவிடும் அபாயம் உள்ளது.

சாட்சிகள் மாறினால் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்; உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கும் நீதி கிடைக்காது. ஏற்கனவே தவெக சார்பில் அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், இப்போது அரசு வேலை வழங்குவது முறையல்ல. எனவே, வழக்கின் தன்மையைக் குலைக்கும் வகையிலும், சாட்சிகளைத் திசைதிருப்பும் வகையிலும் அமையவுள்ள இந்த அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் விஜய் அவர்கள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனப் புதிய தமிழகம் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
டிசி-யை நிறுத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கிடுக்கிப்பிடி!
