திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன், “மேடைகளில் அவதூறாகவோ அல்லது அநாகரிகமாகவோ பேசுவது தவறான முன்னுதாரணம் தான். அதை திமுக ஒருபோதும் ஆதரிக்காது. இருப்பினும், ஓர் அரசை அல்லது முதலமைச்சரை விமர்சித்து பேசுவதற்காகவே கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் கைது செய்வது சட்டத்திற்குப் புறம்பானது” என்று தெரிவித்தார்.
முன்பு அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுப் பின்னர் நீதிமன்றத்தால் ரிமாண்ட் நிராகரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், புதியதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு மக்களின் நலன் சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்தாமல், விமர்சிப்பவர்களின் குரல்வளையை நெரிப்பதிலேயே தீவிரமாக உள்ளது என விமர்சித்தார் .

அரசின் மீது குற்றச்சாட்டு
“புதிய ஆட்சி அமைத்து 60 நாட்களுக்கு மேலாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு, செய்திகளைத் திசைதிருப்பவும், ஊடகங்களுக்குத் தீனி போடவுமே இதுபோன்ற பழிவாங்கும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது” எனச் சாடினார்.
சட்டமன்ற உறுப்பினர் பேச்சு குறித்து
“பொதுமேடைகளில் பேசப்படும் உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகளை சாக்காக வைத்து, வழக்குகளைப் போட்டு அடக்க நினைப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு அழகல்ல” என்றார்.
திமுக அஞ்சாது
“ஜெயலலிதா ஆட்சிக்கால அடக்குமுறைகளையும் மிசா சட்டத்தையுமே எதிர்கொண்ட பாரம்பரியம் கொண்ட திமுக, இதுபோன்ற மிரட்டல்களுக்கும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் என்றும் அஞ்சாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனுக்கு ஆதரவாகத் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், திமுக-வினரின் இந்த அடுத்தகட்ட சட்டப் போராட்டங்கள் அரசியல் களத்தில் சூட்டை உருவாக்கியுள்ளன.
