டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடையக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்லப் பொதுமக்களுக்கு அதிரடியாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நுழைவு வாயில்கள் பூட்டி சீல்!
மெரினா கடற்கரையில் இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், மெரினா பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, மெரினா கடற்கரையின் பிரதானப் பகுதியான உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் (Lighthouse) வரையிலான அனைத்து நுழைவு வாயில்களும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டும், கதவுகள் பூட்டப்பட்டும் அடைக்கப்பட்டுள்ளன.

தீவிர ரோந்துப் பணியில் காவல்துறை
கடற்கரைச் மணல் பரப்புக்குள்ளும், காமராஜர் சாலையிலும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் யாரும் கூட்டமாகத் திரளாத வண்ணம் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிபவர்களைக் காவல்துறையினர் விசாரணை செய்து திருப்பி அனுப்பி வருகின்றனர். வார இறுதிநாட்கள் மற்றும் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் மெரினா கடற்கரை, பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதால் அப்பகுதி முழுவதும் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
