டெல்லியில் நீட் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களின் கோரிக்கைகளில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது என்று தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு எதிராக 3 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
மாணவர்களின் 3 முக்கியக் கோரிக்கைகள் – ராகுல் காந்தி விளக்கம்
செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, ”டெல்லியில் தங்களது எதிர்கால உரிமைகளுக்காகப் போராடி வரும் மாணவர்கள் 3 தெளிவான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த நியாயமான கோரிக்கைகளில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை.”

தர்மேந்திர பிரதானை அமைச்சரவையை விட்டே நீக்க வேண்டும்
”ஊழலின் சின்னமாகத் திகழ்பவரும், இந்தியாவின் கோடிக்கணக்கான குழந்தைகளின் எதிர்கால வாழ்வைச் சீரழித்தவருமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி உடனடியாகப் பறிக்கப்பட வேண்டும். தற்போது நமக்குக் கிடைத்துள்ள நம்பகமான தகவல்களின்படி, தர்மேந்திர பிரதானைக் கல்வி அமைச்சகத்தில் இருந்து வேறு ஒரு துறைக்கு மாற்றுவது குறித்து அரசு விவாதித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனைப் போராட்டக் களத்தில் இருக்கும் மாணவர்களும் நாங்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. துறை மாற்றம் என்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை. அவரை மத்திய அமைச்சரவையிலிருந்தே முற்றிலுமாக நீக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.”
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை
”அமைதியான முறையில் அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டதில் பல மாணவர்களின் கண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறைத் தாக்குதலை நேரடியாகச் செயல்படுத்திய அதிகாரிகள் மற்றும் அதற்கு உத்தரவிட்ட பின்னணியில் உள்ளவர்கள் என அனைவர் மீதும் உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”
பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
”நாட்டில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டதற்கும், அவர்கள் மீது இத்தகைய கொடூரத் தாக்குதல்கள் அரங்கேறியதற்கும் முழு முதற்காரணமான பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடமும் பாதிக்கப்பட்ட மாணவர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.”
உச்சக்கட்டத்தை எட்டியுள்ள டெல்லி அரசியல் களம்
ஏற்கனவே டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் அமைப்புகளின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இந்த அதிரடிச் செய்தியாளர் சந்திப்பு மத்திய பாஜக அரசுக்கு மேலும் கடுமையான அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு இறங்கி வந்ததா? போராட்டம் வாபஸ் பெறப்பட்டதன் நிஜ காரணம் உடைக்கும் சோனம் வாங்சுக்!
