தமிழக காவல்துறையின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கைத் திறம்படப் பராமரிக்கவும் காவல்துறை சார்பில் புதிதாக 29,108 சீருடைப் பணியிடங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.
காவல்துறைக்கு புதிய பலம்
சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது உரையாற்றிய முதலமைச்சர் விஜய், காவல்துறையை நவீனமயமாக்குவது மற்றும் பணியாளர் பற்றாக்குறையைப் போக்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில்:

“மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், குற்றங்களைத் தடுப்பதிலும் காவலர்களின் பணி மகத்தானது. காவல்துறையின் பணிச்சுமையைக் குறைக்கவும், சேவையை மேலும் விரைவுபடுத்தவும் புதிதாக 29,108 காவலர் பணியிடங்கள் தோற்றுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
10,000 காவலர்கள் தேர்வு: இந்த ஆண்டிலேயே (2026) முதற்கட்டமாக 10,000 சீருடைப் பணியாளர்கள் உடனடியாகத் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவர்.
மகளிருக்கு முன்னுரிமை: தேர்வு செய்யப்படவுள்ள 10,000 பேரளவில், 5,000 பணியிடங்கள் பெண் காவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் இந்த நியமனப் பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு, அரசுப் பணிக்குத் தயாராகி வரும் தமிழக இளைஞர்கள் மற்றும் பெண் தேர்வர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
