தமிழை வழக்காடு மொழியாக்கினால் மட்டும் போதாது – சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் அதிரடி பேச்சு!
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், ‘மெட்ராஸ் உயர் நீதிமன்றம்’ என்ற அதன் அதிகாரப்பூர்வ பெயரை ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

“இன்றைய தலைமுறைக்கு மெட்ராஸ் தெரியாது”
சட்டப்பேரவையில் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் அரசினர் தனித்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அதிமுக சார்பில் பேசிய முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான சி.வி. சண்முகம்:
“சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், தமிழை வழக்காடு மொழியாக்கினால் மட்டும் போதாது. இன்றளவும் ‘மெட்ராஸ் உயர் நீதிமன்றம்’ (Madras High Court) என்றே அழைக்கப்பட்டு வரும் பெயர் மாற்றப்பட வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறையினருக்கு ‘மெட்ராஸ்’ என்ற பெயரே தெரியாது. மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என மாற்றப்பட்டு பல பதிற்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தின் பெயரை ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என மாற்றுவதற்கும் அரசு மத்திய அரசை வலியுறுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பேசினார்.
சட்டமன்றத்தில் காரசார விவாதம்
ஏற்கனவே மாநிலத்தின் பல்வேறு அமைப்புகளும், தமிழார்வலர்களும் ‘மெட்ராஸ் உயர் நீதிமன்றம்’ என்ற பெயரை மாற்றி ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ அல்லது ‘சென்னை உயர் நீதிமன்றம்’ என அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகம் முன்வைத்த இந்த கோரிக்கை பேரவையில் இருந்த பிற உறுப்பினர்களின் கவனத்தையும் ஈர்த்தது.
