சட்டமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது என் காரில் இ.பி.எஸ். ஓபிஎஸ் பயணம் செய்யும் சூழல் இருந்தது. அதற்கு நான் என் காரில் எப்பொழுது வேண்டுமானாலும் செல்லுங்கள், ஆனால் கமலாலயம் மட்டும் கொண்டு செல்லாதீர் என்று சட்டமன்றத்தில் பேசியதாக உதயநிதி காமெடியாக பேசினார்.
ஆவடியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், எனக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்க நாசர் அண்ணன் தான் காரணம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் தலைமையில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகன் 100 ஆண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 100 பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் மற்றும் இளைஞர்களுக்கு கிரிகெட் , கால்பந்து, சிலம்பம் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பல நிகழ்ச்சிகளுக்கு எல்லோரும் என்னிடம் தேதி வாங்குவார்கள், ஆனால் ஆவடி நிகழ்ச்சிக்கு நானே தேதியை வாங்கினேன் என்றார்.

எனக்கு எத்தனையோ பொறுப்புகள் வரலாம் போகலாம் ஆனால் உங்களின் வீட்டின் செல்ல பிள்ளையாக இருக்கவே விரும்புகிறேன் என்றார். எனக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்க நாசர் அண்ணன் தான் காரணம் என்றார் உதயநிதி.
ஆவடிக்கு 100 கோடி ரூபாய் மதிப்பில் விளையாட்டு ஸ்டேடியம் சட்டமன்ற உறுப்பினர்கள் நாசர் , கிருஷ்ணசாமி உதவியுடன் கொண்டு வருவேன் என உறுதி அளிக்கின்றேன் என்றார்.
பேராசிரியர் – கலைஞர் இருவரும் நட்புக்கு இலக்கணமாக இருந்தார்கள்.
இளைஞர் அணி தம்பிமார்கள் நாசர் அண்ணணை பார்த்து உழைக்க கற்று கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறிய உதயநிதி, ஊர் பெயருக்கு முன் பொருத்தமான பெயர் கொண்டவர் தான் நாசர் என்றார்.
பேராசியர் திராவிட இயக்கத்தின் கருவூலம் என்ற உதயநிதி, என்னுடைய திருமணமும் பேராசிரியர் தலைமையில் தான் நடைபெற்றது என்று பேசினார்.
இளைஞர் அணி செயலாளராக நான் பதவி ஏற்ற போது முதல் வாழ்த்து பேராசிரியர் தான் கூறினார் என்றார்.
எதிர்கட்சி தலைவர்கள் இ.பி எஸ் ஒ.பி.எஸ் எனது காரில் ஏற முற்பட்டார்கள். நானும் எடுத்து செல்ல சொன்னேன். ஆனால் கமலாலயம் மட்டும் செல்ல வேண்டம் என்றேன். அந்த காரை எடுத்து சென்றிருந்தால் என்ன ஆகி இருக்கும்.
காரை இரண்டாக பிளந்து இருப்பார்கள் என்றார். இவ்வாறு உதயநிதி பேசினார்.



