தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து தங்க நகைகள், பணம் கொள்ளை…
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேவுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னகண்ணு(70) .மூதாட்டி சின்னகண்ணுவிற்கு மூன்று பிள்ளைகள் வேறு வேறு இடங்களில் தனிதனியே இருந்து வருகின்றனர்.கணவன் இல்லாத நிலையில் மூதாட்டி மட்டும் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 9 ம் தேதி ரேசன் கடைக்கு சென்றிருந்த மூதாட்டி அங்கே உறவினர் என கூறிக்கொண்டு மூதாட்டியை சந்தித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நிலம் சம்மந்தமான வேலையாக ஊருக்கு வந்திருப்பதாகவும், பசிக்கிறது சாப்பிட எதாவது கொடுங்கள் என கூறி ரேசன் கடையிலிருந்த மூதாட்டி சின்னகண்ணுவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து மூதாட்டி அணிந்திருந்த சுமார் பத்து தங்க நகைகள், நிலம் விற்று வீட்டில் வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தையும் சுருட்டி கொண்டு மயங்கி கிடந்த மூதாட்டியை வீட்டிற்குள்ளயே விட்டு விட்டு வீட்டின் கதவை வெளிபக்கமாக தாளிட்டு விட்டு அங்கிருந்து மாயமாகியிருப்பதாக கூறப்படுகிறது..
இதனை தொடர்ந்து மூதாட்டி சின்னுக்கண்ணு வீட்டில் மயங்கி கிடப்பதை அறிந்து அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்.சின்னகண்ணுவின் மகன் ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில், பாப்பாரப்பட்டி போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.மூதாட்டி சின்னக்கண்ணுவை பற்றி நன்கு தெரிந்தவர்களே, திட்டமிட்டு கைவரிசை காட்டியிருக்கலாம் என சந்தேகம் எழுந்திருக்கிறது.
கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் பாப்பாரப்பட்டியில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரது வீட்டில், தனியாக இருந்த மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த ஆப்பிள் பழத்தை சாப்பிட வைத்து, நாற்பது தங்க நகைகளை காரில் வந்த பெண் ஒருவர் அள்ளிச்சென்றார்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்,தனியாக வசித்து வரும் மூதாட்டியை நோட்டமிட்டு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்து நகை, பணத்தை கொள்ளையடித்திருக்கின்ற சம்பவம் பாப்பாரப்பட்டி பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.