பொன்னேரி அருகே, 200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகளுக்கு கல்வி சீர் வழங்கப்பட்டது.பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் பகுதியில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் அப்பகுதியை சேர்ந்த வடிவேல், கார்த்திக், நவீன் ஆகியோர் ஒன்றிணைந்து வஞ்சிவாக்கம், திருப்பாலைவனம், அவுரிவாக்கம், மெதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏழை எளிய மாணவ – மாணவிகளுக்கு மாலை நேர வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
மேலும், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பொன்னேரியை சுற்றி இருக்கக் கூடிய கிராமங்களை சேர்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கக் கூடிய ஏழை மாணவ – மாணவிகளுக்கு ஆண்டு கல்வி கட்டண தொகை மற்றும் அவர்களுக்கு தேவையான பைகள் மற்றும் உபகரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
அதன்படி, இந்த ஆண்டு கல்வி சீர் வழங்கும் விழா திருப்பாலைவனம் பகுதியில் இருக்கக் கூடிய புயல் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை, உதவி இயக்குனர் செந்தில்நாதன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணம் பொருட்களையும், பள்ளிகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கி வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மக்கள் நலப்பணி இயக்க அறகட்டளை தலைவர் பாலகிருஷ்ணன், மற்றும் ஆதி தமிழர் விடுதலை இயக்க நிர்வாகி இளஞ்செழியன், வள்ளலார் நிர்வாகி, ரவி, மெதூர் தலைமை ஆசிரியர் அமிர்தராஜ், அக்னி சிறகுகள் கோபாலகிருஷ்ணன், மெதூர் சேகர், இயற்கை அரண் நிர்வாகிகள் பழவேற்காடு ஏகாசலம், கற்பகம் உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.