வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற ‘பூ குவொக்’ தீவு அருகே சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பழனியைச் சேர்ந்த முருகபிரபு உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவவும், தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் 24 மணி நேரமும் (24/7) இயங்கக்கூடிய கட்டணமில்லா அவசர உதவி எண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அரசு அறிவித்துள்ள அவசர உதவி எண்கள்
விபத்தில் சிக்கிய தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்கள், அவசரத் தேவைகள் மற்றும் உடல்களைத் தாயகம் கொண்டு வருவது தொடர்பான உதவிகளுக்குக் கீழே உள்ள எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
- இந்தியாவிற்குள் இருந்து தொடர்பு கொள்ள: 1800 309 3793 (கட்டணமில்லா எண்)
- வெளிநாடுகளில் இருந்து தொடர்பு கொள்ள (Missed Call சேவை): +91 80 6900 9900
- நேரடித் தொடர்புக்கு – +91 80 6900 9901
தமிழக அரசு தயார் நிலை
வியட்நாம் படகு விபத்து தொடர்பாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ மற்றும் மருத்துவ உதவிகளையும், வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகத்தின் வாயிலாகச் செய்து தரத் தமிழக அரசு முழுத் தயார் நிலையில் உள்ளது. மேலும், விபத்து நடந்த பகுதியில் நிலவி வரும் தற்போதைய சூழல் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த விவரங்களைத் தமிழ்நாடு அரசு மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அதிகாரிகள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
வியட்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பரிதாப பலி – உறவினர்கள் சோகம்!
