மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டின் மூலம் சமூக அமைதியை கெடுக்க பாஜக திட்டமிடுவதாகவும், அதற்கு மதுரை மக்கள் இடம்தரக்கூடாது என்றும் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி தெரிவித்துள்ளார்.
மதுரையில் பாஜக சார்பில் நடைபெறும் முருகன் மாநாடு குறித்தும், அதன் பின்னணியில் பாஜக செய்யும் அரசியல் குறித்தும் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மதுரையில் வரும் 22ஆம் தேதி பாஜக முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள். முதலில் இதை ஆரம்பித்தது இந்து முன்னணி அமைப்புதான். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவை வைத்து பிரச்சினை செய்தார்கள். ஹெச்.ராஜா போன்றவர்கள் அதை தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தனர். திருப்பரங்குன்றத்தில் மலை மீட்பதற்கான போராட்டம் என்று இந்து முன்னணியினர் அறிவித்தனர். தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்று கூட்டத்தை அவர்கள் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு முன்னதாக மதுரையில் உள்ள ஒவ்வொரு சாதி சங்கமாக நேரடியாக சென்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், முதலியார், முத்தரையர் போன்ற சாதி சங்கங்களிடம் நோட்டீஸ் அளித்து, அதை புகைப்படம் எடுத்து அந்த சமுதாய மக்களிடம் புகைப்படத்தை காண்பித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார்கள். அந்த போராட்டத்தை ஒட்டி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும் அறிவித்தனர். அதற்காக தற்போது நயினார் நாகந்திரன் தலைமையில் பாஜவினர் மாவட்ட வாரியாக ஆலோசனை மாநாடு என்று கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாவுக்கு இரு பக்கமும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திமுக எதற்காக முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தியது என்று திராவிட இயக்கத்தினர் விமர்சித்தனர். தற்போது அமைச்சரே இதை சங்கிகளின் மாநாடு என்று விமர்சிக்கிறார். இதில் நிலைப்பாடு மாற்றம் என்பது கிடையாது. அரசாங்கம் அறநிலையத்துறை மூலம் முருக பக்தர்களை ஒருங்கிணைக்க ஒரு மாநாடு நடத்துகிறது. இந்த மாநாட்டை நடத்தியதற்கே இவ்வளவு பிரச்சினை உள்ளது என்றால், நடத்தியிருக்காவிட்டால் என்ன மாதிரி போகும் என்கிற அச்ச உணர்வால் இதை நடத்தி இருக்கலாம். காலத்தின் தேவையாக இது மாறியிருக்கிறதோ என்று நிர்வாகத் தரப்பில் இருந்து இதை யோசித்து உள்ளனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒரு கட்டத்தில் அரசின் கையை மீறி செல்வதற்கான அனைத்து வேலைகளையும் இந்து முன்னணி – பாஜக தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் கடுமையான வார்த்தைகளால் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் விமர்சிக்கின்றனர்.
கனல் கண்ணன் போன்றவர்கள் தங்களை எப்படி சங்கி என்று சொல்லலாம் என கேட்கிறார்கள். இதில்தான் செல்வப்பெருந்தகை கேட்கிற கேள்வி மிகவும் முக்கியமானது. இதேபோன்ற முருகன் மாநாட்டை நீங்கள் உ.பியில் நடத்துவீர்களா? என்று அவர் கேட்கிறார். வள்ளலார் சிவனுக்கு பின்னால் பிராமணியம் கட்டிவைத்துள்ள வேத ஆகம குப்பைகளை எல்லாம் எரித்துவிட்டு சிவனை வழிபாட்டு தெய்வமாக ஆக்குகிறார். வேல்யாத்திரை நடத்தும் வழக்கம் பாஜகவுக்கு கர்நாடகாவில் பலன் கொடுத்தது. கர்நாடகாவில் பாஜக நுழைந்தது தென்னகத்தில் முதல் வெற்றியாக அவர்கள் பார்க்கிறார்கள். இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் ஈத்கா மைதானத்தில் பாஜக தேசிய கொடியை ஏற்றுவதாக சொல்கிறார்கள். உடனே அவர்கள் கொடி ஏற்றவிடாமல் தடுத்துவிட்டார்கள் என்று வதந்தியை பரப்பினார்கள். கடைசியில் இது பெரிய கலவரமாக மாறியது. கடைசியில் அந்த மைதானம் சர்ச்சைக்குரிய மைதானமாக மாறியது. அடுத்த 10 ஆண்டுகளில் பாஜக டெபாசிட் வாங்கிவிட்டோம் என்று ஊர்வலம் செல்கிறது. அடுத்து ஆட்சியை பிடித்து விட்டார்கள். அப்படி மாற்றுவதற்கு தமிழ்நாட்டில் முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சிக்கு அதிமுக உதவும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஏன் என்றால் அண்ணாமலையின் யாத்திரையின்போது அதிமுகவின் தலைவர்கள் நேடியாக கலந்துகொண்டு பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். தளவாய் சுந்தரம் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கிவைத்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்கி நாடகம் ஆடினார்கள். பாஜக யாத்திரையின் முக்கியமான நோக்கம் அனைத்து ஊர்களில் உள்ள பணக்காரர்களை திரட்டி, அவர்களிடம் இருந்து நிதியை பெற வேண்டும் என்பதுதான். அது தற்போது தொடர்கிறது. இந்த பேரணியில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? கூட்டணி என்கிற பெயரில் பாஜகவின் இந்த பேரணிக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கப் போகிறதா? பாஜக எந்த மாநிலத்திலும் அவர்களின் சொந்த பலத்தில் வளர்ந்தது கிடையாது. நயினார், பாஜக மாநிலத் தலைவராக தேர்வு செய்வதற்கு முன்பாக நெல்லையில் இருந்து வாரம் ஒரு கலவரம். வாரம் ஒரு வெட்டுக்குத்து நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினரான அவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. அதேபோன்ற ஒரு வேலையை திருப்பரங்குன்றத்தில் செய்ய பார்க்கிறார்கள்.
அமித்ஷா தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது. ஏன் மதுரையில் நடைபெறுகிறது என்றால் திமுகவின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அதற்கான எதிர்வினை. அடுத்து மதுரையில் நடைபெற உள்ள முருகன் மாநாட்டிற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. மதுரை ஆதினம் தொப்பு போட்ட தாடி வைத்த ஒருவர் என்னை கொல்லப்பார்த்தார் என்று சொல்கிறார். அதேபோல் தொப்பி தாடி வைத்த சங் பரிவார் ஒருவர் கூட்டத்திற்குள் கல்வீசினால் மதுரையை எரிக்க தயாராக உள்ளனர். இதை திமுக எதிர்க்கிறது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு சென்று உத்தரவுகளை வாங்கி வருகிறார். மதுரையை குறிவைத்து பாஜக இயங்குவது என்பது மிகவும் திட்டமிட்ட அஜெண்டாவாகும்.இந்த அஜெண்டாவில் தமிழ்நாடு அரசு இன்னும் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாததற்கு 2 காரணங்கள் உள்ளன. ஒன்று தமிழன் என்கின்ற அடையாளம். மற்றொன்று இதை உருவாக்கித் தந்த பெரியார் என்கின்ற பிம்பம். இந்த இரண்டும் இருக்கிற வரைக்கும் பாஜகவால் வேரூன்ற முடியாது. இதை உடைக்க ரஜினிகாந்த் உதவிகரமாக இருப்பார் என்று நியூ பிஜேபி என்கிற புத்தகத்தில் உள்ளது. தற்போது ரஜினிகாந்த் இல்லை. அவருக்கு பதிலாக விஜய் இருக்கிறார். அவர் திருப்பரங்குன்றம் பத்தி வாயே திறக்க மாட்டார்.
மதுரை சிக்கந்தர் தர்காவுக்கு நவாஸ் கனி சென்ற விவகாரத்தை பாஜக பிரச்சினையாக்கியது. அவர்களின் இடத்தில் அவர் சாப்பிட்டதற்கு ஏன் அப்படி செய்தார் என்று நடுநிலையானவர்களே கேள்வி எழுப்புகிறோம். அவர்களுக்கான உரிமையை உறுதி படுத்த வேண்டியது தானே நமது கடமை. ஆனால் பொதுபுத்தியில் அது தவறு என்று பதிய வைக்கிறார்கள். நாயக்கர் ஆட்சியே நடைபெற்றாலும் மதுரையில் இந்து – முஸ்லிம் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியவில்லை. இங்குள்ள சாதிகளுக்கு இடையிலான ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது என்பதற்காக தான் இன்றைக்கும் திருவிழா நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆதினம் பேசுவது ஏன் மதுரையில் எடுபடவில்லை என்றால் இந்த பொது மனசாட்சி இருப்பதால் தான். உலகத்தில் எந்த கோவில் ஐயராவது பாய்க்கு மாலை போட்டு பார்த்திருக்கிறீர்களா? ஆனால் மீனாட்சி அம்மன் மாலையை எடுத்து பாய்க்கு போடுவார்கள். மதுரையில் ஐயராகவே இருந்தாலும் அவனுக்கு என்று ஓர் உணர்வு ஏற்படுகிறது அல்லவா? அந்த மதுரைக்கார்களின் உணர்வை தான் நான் கேள்வி எழுப்புகிறேன். அந்த உணர்வை கெடுப்பவர்களை ஓட ஓட விரட்ட வேண்டிய பொறுப்பு மதுரைக்கு உள்ளது என்று நான் நம்புகிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.