விஜயை, அதிமுக – பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இன்னும் நடைபெற்று வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக பாஜக அமைப்பு செயலாளராக இருந்த கேசவ விநாயகம் அண்மையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கன்னியாகுமரியை சேர்ந்த அவரை, பொன்னார் தான் பொறுப்புக்கு கொண்டு வந்தார். ஆனால் பெண்கள் விவகாரத்தில் மிகவும் பலவீனமானவராக இருந்த கேசவ விநாயகத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. அண்ணாமலையும், கேசவ விநாயகமும் சேர்ந்து முறைகேடாக கோடியாக கோடியாக பணம் சேர்த்தார்கள். அதன் காரணமாகவே அண்ணாமலை பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பிறகு கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரனுக்கு தொல்லை கொடுத்ததால் அவர் தற்போது பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். நயினாரின் மகன் நயினார் பாலாஜி ரூ.100 கோடி நிலத்தை மோசடி செய்ததாக புகாரில் சிக்கினார். அறப்போர் இயக்கம் இந்த முறைகேட்டை வெளியிட்டது. இதற்கு பின்னணியில் இருப்பது அண்ணாமலைதான். நயினார் மற்றும் அண்ணாமலை ஆகியோர் இடையே போட்டி தீவிரமடைந்துள்ளது. அதுதான் பாஜகவின் மிகப்பெரிய பலவீனமாகும்.

அதிமுகவை பொறுத்தவரை சசிகலா, ஓபிஎஸ் மிகப்பெரிய மைனஸ். முக்குலத்தோர் சமுதாய மக்கள் சசிகலாவை தான் தங்களுடைய சமுதாய தலைவர்களாக எடுத்துக்கொள்வார்கள். டிடிவி தினகரனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 2026 தேர்தலில் அதிமுகவில் சீட் கிடைக்காமல் போகிறவர்களை சசிகலா தேர்தலில் நிறுத்தப் போகிறார். அது பெரிய அளவில் வேலை செய்யும். சசிகலா குறைந்தபட்சம் 50 தொகுதிகளில் அதிமுகவை வீழ்த்தி விடுவார்.தன்னால் முதலமைச்சர் ஆகிய எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஆகி இருப்பதும், தன்னை கட்சிக்குள் சேர்க்காமல் எடப்பாடி பழனிசாமி அவமதிப்பு செய்ததையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எனவே எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும் என்கிற மனநிலையில் உள்ளார். அண்ணாமலைக்கு கட்சியில் சக்தி கேந்திரா பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் பெரிய அளவிலான பொறுப்பை எதிர்பார்த்து இருந்தார். வானதி சீனிவாசன் போட்டியிட்ட தொகுதியில் அண்ணாமலை போட்டியிட விரும்பும் நிலையில், அதனை வானதி விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டார்.

அதிமுக – பாஜக கூட்டணிக்கு தேர்தல் செலவுக்கு நிதி வழங்குவது ஸ்டெர்லைட் நிறுவனமாகும். அவர்கள் ரூ.5000 கோடி வழங்கியுள்ளனர். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க முயற்சி செய்து வருகிறார்கள். அதானி, அம்பானி போன்றவர்களும் நிதியுதவி செய்துள்ளனர். என்.டி.ஏ கூட்டணியில் இணைவதற்கு தேமுதிக தரப்பில் ரூ.300 கோடி கேட்கப்பட்டிருக்கிறது. ரூ.70 கோடி வழங்க எடப்பாடி பழனிசாமி முன்வந்துள்ளார். இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.
வேதாந்தா, அதானி, அம்பானி போன்றவர்களிடம் இருந்து பணம் பாஜகவுக்கு வரும்போது, அதை கையாளுகிற இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்கிறார். கேரளாவில் சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்து, பாஜக உள்ளாட்சி தேர்தலில் பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. அதேபோல் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தவெகவை, என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாஜகவின் இந்துத்துவ கொள்கைகளை எதிர்த்து இதுவரை விஜய் பேசவில்லை. அதற்கு காரணம் பாஜகவால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் விஜயின் தவெக. அதற்காக பாஜக ரூ.2000 கோடி வழங்கியது. பின்னர் தனக்கு என்று தனி மாஸ் உருவாவதை பார்த்து, தனியாக நிற்கலாம் என்று விஜய் வந்துவிட்டார். இதில் தீவிரம் காட்டியபோது தான் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பிரச்சினைகள் எல்லாம் ஏற்பட்டது. அதின் கடைசி இலக்கு என்பது அவர் என்டிஏ கூட்டணிக்கு வர வேண்டும் என்பதாகும். இல்லாவிட்டால் அவரை பிடித்து சிறையில் போட்டுவிடுவார்கள்.
ஓபிஎஸ் மகன் மீது 47 வழக்குகள் உள்ளன. அவர் என்டிஏவுக்குள் போகாவிட்டால் அவரையும், அவரது மகனையும் பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள். அந்த அச்சம் விஜய்க்கு இன்னும் உள்ளது. திமுகவுக்கு பெரிய அளவில் செல்லும் சிறுபான்மையினர் வாக்குகள் விஜய்க்கு வர வேண்டும் என்றுதான் அவரை ஜோசப் விஜய் என்று எல்லாம் பாஜக விமர்சித்தது. ஆனால் உண்மையில் அவர் அதிமுகவின் வாக்குகளை தான் கபளிகரம் செய்கிறார். எனவே விஜய் அதிமுக கூட்டணிக்குள் வந்தால் தான் அதிமுகவை பாதுகாக்க முடியும். அதனால் விஜயை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று தீவிரமாக உள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


