Homeசெய்திகள்கட்டுரைஅதிமுக கூட்டணிக்கு நெருக்கடி! வார் ரூம் சேட்டைகளை உடைத்து சொல்லவா?

அதிமுக கூட்டணிக்கு நெருக்கடி! வார் ரூம் சேட்டைகளை உடைத்து சொல்லவா?

-

- Advertisement -

தேமுதிக உடன் கூட்டணி அறிவிப்பை அந்த கட்சியினரின் ஒப்புதல் இன்றி அதிமுக வெளியிட்டுள்ளது மிகவும் தவறானது என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

அதிமுக – தேமுதிக இடையிலான ராஜ்யசபா தேர்தல் இடம் ஒதுக்கீடு விவகாரம் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தேமுதிகவுக்கு துரோகம் செய்தாரா எடப்பாடி என்றால்? பிரேமலதா விஜயகாந்தின் பார்வையில் பார்த்தால் அது துரோகம் தான். ஆனால் அவர் கூட அந்த வார்த்தையை வெளிப்படையாக சொல்லாமல் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டார். அதிமுக தரப்பில் 2 விஷயங்கள் நடைபெற்றது. ஒன்று ராஜ்யசபா தேர்தலுக்கு அதிமுக தரப்பில் 2 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அது சரியான தேர்வு ஆகும். அதற்காக எடப்பாடி பழனிசாமியை பாராட்டலாம்.

அந்த ஒரு அறிக்கையுடன் நிறுத்தி இருந்தார்கள் என்றால் கவுரவமாக இருந்திருக்கும். இரண்டாவது அறிக்கை வெளியிட்டதில் என்ன தவறுஎன்று கேட்டால்?. கூட்டணி தொடர்வதை அறிவிக்கும் போது யாரெல்லாம் அங்கு இருக்க வேண்டும். இரு தரப்பிலும் குறைந்தபட்சம் ஒருவர் இருக்க வேண்டும். கூட்டணி அறிவிக்கப்போகிறோம். குறைந்தபட்சம் சுதீஷை வர சொல்லலாம் என்று கே.பி.முனுசாமி சொல்லி இருக்கலாம். அதற்கு முதல் நாளில் சுதீஷிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறபோதாவது கூட்டாக அறிக்கை வெளியிடலாம் என்று சொல்லி இருக்கலாம். ஒரு வேலை சுதீஷ் நழுவுகிறார் என்கிறபோது, அந்த அறிக்கையே வெளியிடாமல் இருந்திருக்கலாம்.

இந்த விவகாரத்தில் அதிமுக மறைமுகமாக அவமதிக்கப்பட்டது. காரணம் பிரேமலதா அல்ல. எடப்பாடியை சுற்றி இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான். ராஜ்யசபா சீட் தருவதாக எழுத்துப்பூர்வமாக கொடுத்துவிட்டு பொதுவெளியில் அதை மறுக்கலாமா? இது ஒரு தலைவனுக்கு அழகு அல்ல. பிரேமலா அதை அழகாக எதிர்கொண்டார். தேர்தலை மையப்படுத்தி அதிமுகவில் அறிவித்துள்ளார்கள். நாங்களும் தேர்தலை மையப்படுத்தி ஜனவரியில் முடிவை அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார். தேமுதிகவுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. திமுக பொதுக்குழுவில் விஜயகாந்தின் மறைவுக்காக தீர்மானம் போட்டதற்காக பிரேமலதா 2 முறை நன்றி தெரிவிக்கிறார். இதன் மூலம் திமுகவையும் அவர் ஒரு கூட்டணிக்கான வாய்ப்பாக வைத்திருக்கிறார் என்பது தோன்றுகிறது.

தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் வெளியானது!

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறபோது அதிமுக – தேமுதிக கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்று எடப்பாடி சொல்கிறார். அப்படி சொல்கிற நீங்களே ஒரு பிளவுக்கு வழிவகுத்து விட்டீர்களே. பிரேமலதாவை அழைத்து எடப்பாடியும், அவருமே பேசியிருக்கலாமே? எந்த அடிப்படையில் தேமுதிக கூட்டணியில் தொடர்வதாக அறிக்கை வெளியிடுகிறார்கள்.  கூட்டணி விவகாரத்தில் தேமுதிகவை,  அதிமுக கையாண்ட விதம் ரசிக்கும்படியாக இல்லை. இது அதிமுக செய்த தவறாகும்.

காயப்பட்ட தேமுதிகவை மருந்துபோட்டு ஆதரிக்க வேண்டிய நேரத்தில் இன்னொரு காயத்தை ஏற்படுத்திவிட்டார்கள். திமுகவில் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சில முனுமுனுப்புகள் இருக்கின்றன. ஆனால் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் குறித்து யாரும் வாய் திறக்கவில்லை. எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் கூட இவரையா தேர்வு செய்தீர்கள் என்று எந்த கேள்வியும் கேட்க முடியாத தேர்வாகும். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போன்ற தகுதியான பலர் அதிமுகவில் உள்ள நிலையில், அவர்களில்  சரியான 2 பேரை தேர்வு செய்துள்ளார் எடப்பாடி.

அதிமுகவுக்கு நெருக்கடி இன்றும் தொடர்கிறது. எடப்பாடி மெகா கூட்டணி என்று சொல்வது கூட பெரிய வார்த்தையாகும். திமுக கூட்டணி உடையாதவரை இங்கே மெகா கூட்டணிக்கு வாய்ப்பு கிடையாது. ஆனால் வலுவான கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு பாமகவை சேர்க்க வேண்டும். விஜயை எப்பாடு பட்டாவது தங்கள் பக்கம் இழுத்துவிட்டார்கள் என்றால்? அது வெற்றிக் கூட்டணியாகவே மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பாமக தற்போது கூப்பிடுகிற நிலைமையில் இல்லை. பாஜக தங்களின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, எத்தனையோ கட்சிகளை உடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை நீக்கிவிட்டு, நயினார் நாகேந்திரனை கொண்டுவந்தார்கள். இன்றைக்கு நயினாரை காலிசெய்ய வேண்டும் என்று ஒரு வார் ரூம் வேலை செய்து கொண்டிருக்கிறது. அப்படி செய்வது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். சொந்த கட்சிக்குள்ளேயே நடைபெறுகிறது. நீங்கள் செய்த விணை, உங்களையே வந்து சேரும். இவ்வளவு ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறீர்கள். ஒரு துளிகூட பயமில்லாமல் ஒரு குரூப் நயினாரை போட்டு காலி செய்து கொண்டிருக்கிறார்கள்.

புது தலைவர் வந்து உற்சாகமாக பயணத்தை தொடங்க வேண்டிய நேரத்தில் இதற்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்கிறார். கூட்டணி உருவாகிவிட்டது அதிமுகவை திட்டாதீர்கள் என்று ஒரு தலைவர் வேண்டுகோள் விடுக்கிறார். அந்த அளவுக்கு உள்ள பிரச்சினைகள் நடக்கிறது. தமிழக பாஜகவுக்குள் ஒரு நிழல் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது அந்த கட்சிக்கு நல்லது அல்ல. பாஜக மற்ற கட்சிகளை உருட்டி மிரட்டிக் கொண்டிருந்தது. இன்றைக்கு அந்த கட்சிக்குள்ளே என்ன செய்வது என்று தெரியவில்லை. அதிமுக கூட்டணிக்கு யாராவது ஒருவர் வந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறார். மெகா கூட்டணி என்று சொல்கிறாம் என்றால், அதை செயல்வடிவம் கொண்டுவருவதற்கு குறைந்தபட்சம் மெனக்கெட வேண்டும் என்பதற்காக தான் அதிமுக – தேமுக கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்று சொல்கிறார். பிரமலதா வரவேற்கவில்லை என்பது தெரிந்தபோதும் அந்த கட்சிக்கு எடப்பாடி குரல் கொடுக்கிறார். அதுதான் எதார்த்தம். வேல்முருகன் சட்டப்பேரவையில் திமுக அரசை அப்படி விமர்சித்தார். ஆனால் முதலமைச்சர் அவரை அழைத்துப்பேசுகிறார். வலுவாக இருக்கிற அந்த கூட்டணிக்கே ஸ்டாலின் இவ்வளவ மெனக்கெடுகிறார் என்றால்? ஆட்சி அதிகாரத்தை பிடிக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமி இன்னும் மெனக்கெடுவார்.

MUST READ