19. நான் அப்படி ஆகுவேன் – என்.கே.மூர்த்தி
”நீ எதுவாக இருக்க விரும்புகிறாயோ அதற்கு அருகில் சென்று விட முனைந்து செயல்படு ”- சாக்ரடீஸ்
‘’நான் அப்படி ஆகுவேன்’’ என்று நமது ஆழ்மனம் பெரும் ஏக்கத்தில் இருக்கிறது. நம்மை விட கல்வியில் உயர்ந்தவரையோ, பொருளாதாரத்தில் உயர்ந்தவரையோ அல்லது புகழின் உச்சியில் இருப்பவரையோ பார்க்கும் போது நமது மனமும் “நான் அப்படி ஆனால் எப்படி இருக்கும்’’ என்று ஆழ்மனம் ஏங்கும். ஆனால் நாம் நமது எண்ணத்தை, ஆழ்மனதின் ஏக்கத்தை, கண்டுக் கொள்வதில்லை. அலட்சியப் படுத்துகிறோம். அதனால் இப்போதைய வாழ்க்கையை வாழ்கிறோம்.
நாம் எப்படி ஆக விரும்புகிறோமோ, நாம் அப்படி ஆகுவோம் என்ற கற்பனையில் தொடர்ந்து சிந்தித்தால் நமது ஆழ்மனதிற்கு பலம் கூடுகிறது. அதுவே உண்மை வடிவமாக உருப்பெறுகிறது.
நான் அப்படி ஆகுவேன் என்பது ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனை. வெற்றியை சிந்திப்பது வெற்றியை கண்ணிற்குள் உருவகப்படுத்தினால் போதும். வெற்றியின் அருகில் சென்று விட்டோம் என்று உறுதியுடன் நம்பலாம்.
ஆழ்மனச் சித்திரம் வலிமையுடன் இருக்கும் போது சுற்றுப்புற சூழ்நிலைகள் அதற்கு கட்டுப்படுகிறது. நான் அப்படி ஆகுவேன் என்று சிந்தித்தால் போதும். நமது ஆற்றல் அதற்கு ஏற்ப வழிநடத்தும் என்கிறார் மனோதத்துவ நிபுணர் வில்லியம் ஜேம்ஸ்.
நான் அப்படி ஆகுவேன் என்று கற்பனை செய்வது, தொடர்ந்து சிந்திப்பது, அடுத்தப்படியாக செயல்படுவது என்ற படிநிலைகளை கொண்டது.
வெற்றி பெறுவதற்கு மனோதத்துவ முறைப்படி இந்த நான்கு படிநிலைகளை தவிர்த்து வேறு வழிமுறைகள் கிடையாது.
1. நான் அப்படி ஆகுவேன் என்று கற்பனை செய்வது.
2. நான் அப்படி ஆகுவேன் என்று சிந்திப்பது.
3. நான் அப்படி ஆகியே தீருவேன் என்று முடிவெடுப்பது.
4. நான் அப்படி ஆகியே தீருவேன் என்று உடனடியாக செயலில் இறங்குவது.
இந்த நான்கு வழிமுறைகள் மட்டுமே ஒருவரை சாதனையாளராக மாற்றுவதற்கு வழிமுறை.
வாழ்க்கையில் தோல்வி அடைந்த நிறைய பேர்களை கவனித்திருக்கிறேன். அவர்களின் தோல்விகளுக்கு ஏராளமான காரணங்கள் இருந்திருக்கிறது. அதில் முதன்மையான காரணம் முடிவு எடுக்க தெரியாமல் தடுமாறியது அல்லது முடிவு எடுக்க காலதாமதம் செய்தது. இதுதான் உண்மை.
தாமதம் என்பது முடிவு எடுப்பதற்கும், அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கும் முதல் எதிரி.