என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்த போது அந்த கூட்டணி பலம்பெற்றது போல் தோன்றினாலும், தற்போது திமுக கூட்டணி விஸ்வரூபம் எடுத்துவிட்டது என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். திமுகவின் டிஎன்ஏவை மாற்ற ஸ்டாலின் முயற்சிப்பதாக கூறிய பத்திரிகையாளர் மணி, அதன் காரணமாகவே அதிமுக தலைவர்களை திமுகவில் இணைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுகவில் இருந்து திமுகவில் இணையும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், சுப்பு ரத்தினம் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்திருக்கின்றனர்.

இப்படி திமுகவில் அதிமுக தலைவர்கள் அதிகரிப்பதற்கு பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை மூத்த பத்திரிகையாளர் மணி பேசி இருக்கிறார். அதில் பத்திரிகையாளர் மணி பேசுகையில், 4 முனைப் போட்டியில் திமுக வெல்லும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதிகாரத்தை தக்க வைக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். அதிகாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது ஸ்டாலின் நன்றாக தெரிந்திருக்கிறது.
அப்படியானவர்களிடம் அதிகாரம் ஒருமுறை சென்றுவிட்டால், அவ்வளவு எளிதாக அதிகாரத்தை அவர்களிடம் இருந்து கைப்பற்றிவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை ஸ்டாலின் மிகவும் அதிர்ஷ்டக்காரர். ஏனென்றால் தமிழ்நாட்டிற்கு வெளியில் பாஜக ஒரு சாபக்கேடு. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள திமுகவுக்கு பாஜக தான் ஒரு அதிர்ஷ்டம். திமுக கூட்டணி இணக்கமாக இருப்பதற்கு பாஜக எதிர்ப்பும் ஒரு காரணம்.
அதேபோல் ஸ்டாலினும் கூட்டணி கட்சித் தலைவர்களை அரவணைத்து செல்கிறார். 2 நாடாளுமன்றத் தேர்தல், 2 சட்டசபைத் தேர்தல்களில் ஒரே கூட்டணியுடன் ஸ்டாலின் பயணிக்கிறார். இது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. நிச்சயமாக அதற்கான கிரெடிட்டை அவருக்கு கொடுத்துதான் ஆக வேண்டும். என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்த போது, அதிமுக பலம் அடைந்துவிட்டதோ என்ற ஒரு பார்வை உருவாகியது.
ஆனால் திமுகவின் அடுத்தடுத்த நகர்வுகளால் அது மொத்தமாக உடைந்துவிட்டது. தேமுதிக, எஸ்டிபிஐ, மக்கள் நீதி மய்யம் என்று கூடுதலாக கட்சிகளை இணைத்துள்ளார். ஓபிஎஸ் மாதிரியான 3 முறை முதல்வரை திமுகவுக்குள் கொண்டு வந்துவிட்டார். திமுக இப்போது விஸ்வரூபம் எடுத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
அதேபோன்று பாஜகவால் கடந்த ஓராண்டாக திமுகவுக்கு எந்த தொல்லையையும் கொடுக்க முடியவில்லை. பாஜகவின் கவனம் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் உள்ளது. கேரளா, தமிழ்நாட்டில் பாஜக பார்வை திரும்பவில்லை. டாஸ்மாக் வழக்கில் திமுக பெற்ற தடையை கூட அமலாக்கத்துறையால் உடைக்க முடியவில்லை. டெல்லி மதுபான வழக்கிலும் நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்துவிட்டது.
மன்னிப்பு கேட்க வேண்டிய சூழல் அமலாக்கத்துறைக்கு உருவாகி இருக்கிறது. இதனால் திமுக பக்கம் அதிர்ஷ்டமும் உள்ளது. அதேபோல் அதிமுக தலைவர்கள் திமுகவில் தொடர்ந்து இணைகிறார்கள். இதனை ஸ்டாலின் திட்டமிட்டே செய்கிறார். அதாவது திமுகவினரின் டிஎன்ஏ கொஞ்சம் அதிகாரமிக்கது.. ஆனால் அதிமுக பிரச்சனை இருந்தாலும், கொஞ்சம் அமைதியாகவே மக்களை அணுகுவார்கள்.
அதனை மாற்ற ஸ்டாலின் முயற்சிக்கிறார். அதேபோல் விழுப்புரத்தில் பொன்முடி இருக்கும் அதிமுகவில் இருந்து வந்த லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் பெரிதாக திமுகவுக்கு முகம் இல்லை. இப்போது மனோஜ் பாண்டியன் மற்றும் ஓபிஎஸ்ஸை உருவாக்குகிறார்கள். கரூரில் செந்தில் பாலாஜி உருவாகி இருப்பதோடு, கொங்கு மண்டலத்தின் முகமாக மாறி இருக்கிறார்.
எங்கெல்லாம் திமுகவுக்கு ஆளுமை இல்லாத தலைவர்கள் இல்லையோ, அங்கெல்லாம் அதிமுகவில் இருந்து வந்தவர்களை திமுக உருவாக்குகிறது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்களில் 8 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதனால் திமுகவின் டிஎன்ஏ ஸ்டாலின் மாற்ற நினைப்பதாகவே கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


