spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? விளக்குகிறார் கே. அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? விளக்குகிறார் கே. அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ்!

-

- Advertisement -

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் குறிப்பிட்ட சாதியினரின் நிலையை கண்டறிந்து அவர்களை மேம்படுத்த திட்டங்களை வகுக்க முடியும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மாநில உரிமைகளுக்கான வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான கே. அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மத்திய அரசு அறிவித்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் கே. அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது என்பது ஒரு வரலாற்றுப்பூர்வமான முடிவு ஆகும். பாஜக அரசு தற்போது வரை சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருந்த நிலையில், இந்த முடிவு எதிர்பாராத வகையில் வந்துள்ளது. நாட்டில் எந்த கொள்கையை உருவாக்குவதாக இருந்தாலும் அதற்கு அடிப்படையானது தரவுகள் ஆகும். 1951ஆம் ஆண்டில் இருந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. முழுதாக பண்ணவில்லை என்று சொல்ல முடியாது. எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஓபிசி மற்றும் மேல் வகுப்பினருக்கு 1951ஆம் ஆண்டில் இருந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. நேரு காலத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு தவறானதாகும். கடந்த 2017ஆம் ஆண்டு ஓபிசி பிரிவில் எந்த சாதிகள், எப்படி பயனடைந்துள்ளனர் என்பதை ஆய்வு செய்வதற்காக நீதிபதி ரோகினி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கடந்த 2023ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அதன் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

பத்திரிகைகளில் வெளிவந்த தகவல் அடிப்படையில் பார்த்தோம் என்றால், 10 சாதிகள் 25 சதவீதம் பயன் பெறுகிறார்கள். 25 சதவீத சாதிகள், 97 சதவீத பயன் பெறுகிறார்கள். 37 சதவீதம் பேருக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. 38 சதவீதம் பேருக்கு 3 சதவீத பயன்கள் கிடைக்கின்றன. இந்த தரவுகள் இருந்தால்தான் சிலர் மட்டும் பயன்பெறுகிறார்கள். மற்றவர்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை என்பது தெரிகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது. இந்த நடைமுறை மத்திய அரசு நடத்துகிற சர்வேக்களிலும் தொடர வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது சட்டப்படி கட்டாயமாகும். கல்வி, அரசு வேலைவாய்ப்பு மற்றும் தேர்தல் போட்டியிடும் தொகுதிகளில் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. 1951ல் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியபோது என்ன காரணங்களை சொன்னார்கள் என்றால்? அவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளதால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக சொன்னார்கள். ஆனால் அதே இடஒதுக்கீடு முறை ஓபிசிக்கும் பொருந்தும். ஏனென்றால் அப்போதே பல மாநிலங்களில் கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு இருந்தது. 1993ஆம் ஆண்டு 73, 74-வது சட்டத் திருத்தத்திற்கு பிறகு உள்ளாட்சி அமைப்புகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.  அப்படி என்கிறபோது ஓபிசி சாதிவாரி கணக்கெடுப்பை 2001ஆம் ஆண்டிலேயே நடத்தி இருக்க வேண்டும். 1992 மண்டல் கமிஷன் அறிக்கையில் 1931ம் ஆண்டு கணக்கெடுப்பை அடிப்படையாக  கொண்டு ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது சரியல்ல. இனி ஓபிசி பிரிவினர் குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று சொன்னது. தற்போது 2019ல் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இதனால் அந்த பிரிவினரையும் நாம் கணக்கு எடுக்க வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை நமது நாட்டில் உள்ள மக்களின் குழு புகைப்படம் போன்று வைத்துக்கொண்டால், அதில் அனைவரும் வர வேண்டும். சாதி என்பது இந்திய சமுதாயத்தில் முக்கியமான ஒரு அங்கமாகும். அதை எடுத்துவிட்டு கணக்கெடுப்பு நடத்துவது என்பது தவறு. ஒரு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால் அது குறித்த புள்ளி விபரங்கள் நமக்கு தேவையாகும். வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் எவ்வளவு என்று தெரிய வேண்டும். சிலர் அளவுக்கு அதிகமான வசதிகளை வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள். அது வெளியே வரக்கூடாது என்பதற்காக சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கிறார்கள். மேல்தட்டு மக்கள் நாட்டின் வளம், வருமானம், செல்வத்தை அனுபவிப்பவர்கள், இந்த விவரங்கள் வெளிவரக்கூடாது என்று நினைக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் இவை எல்லாம் வெளியே வரும். சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது படிப்பு, வேலைவாய்ப்புக்கு மட்டும் பயன்படுவது கிடையாது. உதாரணமாக நிலத்தை எடுத்துக்கொண்டால் எந்த சாதிகளிடம் நிலம் உள்ளது. யாரிடம் நிலம் இல்லை. எந்த சாதியிடம் அதிகளவு நிலங்கள் உள்ளன என்ற விவரங்கள் தெரியவரும். குடியிருக்கும் வீடுகளின் நிலை. வாகனங்கள் என எல்லாவற்றுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகும்.

பீகாரில் 2023ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்க விஷயமாக பட்ட மேற்படிப்பு, பிஹெச்.டி, தொழிற்கல்வி படித்தவர்கள் ஒவ்வொரு சாதியிலும் எத்தனை பேர் என்று பார்த்தால், காயஸ்தாஸ் சாதியினரிடம் 11 சதவீதம் இருந்தது. மசார் சாதியில் 0.01 சதவீதம் தான் உயர்கல்வி படித்துள்ளனர். யாதவர்களும் சராசரி அளவிலேயே உயர்கல்வியை பெற்றிருந்தனர். நிலம் மற்ற விவசாயிகளின் சாதிவாரி விவரம் என்ன? குடிசையில் வாழும் மக்களின் சாதி விவரம் என்ன? வங்கிக்கடன் பெற்றவர்கள், நிரந்தர வேலையில் உள்ளவர்களின் சாதி விவரம் என்ன? ஒப்பந்த தொழிலாளர்களின் விவரம் தெரிய வேண்டும். புள்ளிவிவரங்களே இல்லாமல் நீங்கள் நலத்திட்டங்களை திட்டமிட முடியாது.

சாதிவாரி புள்ளி விவரங்கள் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக திட்டங்கள் போடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஒரு சில சாதியினர் ஒட்டுமொத்த பலன்களையும் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் டாப் ஒரு சதவீத இந்தியா, 50 சதவீத வருமானம் மற்றும் சொத்துக்களை கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. கடையில் உள்ள 50 சதவீதம் பேர் வெறும் 5 சதவீத வருமானம் மற்றும் சொத்துக்களை மட்டுமே கொண்டிருக்கின்றனர். ரோஹினி கமிஷன் அறிக்கையின்படி 37 சதவீத ஓபிசி பிரிவினர் இதுவரை எந்த பயனும் பெறவில்லை. 38 சதவீதம் பேருக்கு 3 சதவீத பயன்தான் கிடைத்துள்ளது. ஆனால் 10 சாதிகள் மட்டும் 25 சதவீத பலனை பெற்றிருக்கிறார்கள். இந்த புள்ளி விவரங்கள் இருந்தால்தான் நாம் திட்டங்களை உருவாக்க முடியும்.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஓபிசி பிரிவில் தனி இடஓதுக்கீடு வழங்க வேண்டும். எந்தவித பயனும் பெறாத 37 சதவீதம் பேருக்கு தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும். இவ்வளவு நாள் நாம் இதை பண்ணவில்லை என்பதால்தான் இவ்வளவு பிரச்சினைகள். ஆனால் கீழ்நிலை மக்களுக்கு பல்வேறு விதமான அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே சொல்கிறார்கள், எம்.பி.சி. பிரிவில் 106 சாதிப்பிரிவுகள் உள்ளதாகவும், அதில் 3-4 சாதிகள் தான் அதிக பயன் பெறுவதாகவும் சொல்கிறார்கள்.   ஒரு சாதி எண்ணிக்கையில் பலமாக இருந்தால், அந்த சாதி அரசியல் ரீதியாக வலுவானதாக இருக்கும். அவர்கள் அடித்துபிடித்து வாங்கிவிடுவார்கள். சில சாதிகளில் மக்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆனால் கல்வி, பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் பல சாதிகள் எண்ணிக்கை அடிப்படையிலும், கல்வி, பொருளாதார அடிப்படையிலும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

 

MUST READ