EWS 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து இடஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்கிற தடை உடைக்கப்பட்டு விட்டதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக முன்வைக்கப்படும் வாதங்களுக்கு தர்க்க ரீதியாக பதில் அளித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி பிரபல தொலைக்காட்சிக்கு அளித்திருக்கும் நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சாதிவாரி கணக்கெடுப்பு சமுதாயத்தை கூறுபோட்டுவிடும் ஒற்றுமையாக வாழ்வதை கெடுத்துவிடும் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆதிக்க சக்திகள் அனுபவிக்கும் வசதிகள் தங்களை விட்டுப்போய் விடக் கூடாது என்பதற்காக இதுபோன்ற பூச்சாண்டிகளை காட்டுகிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் 1881 முதல் 1931 வரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினார்கள். அப்போது பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1,234 எஸ்.சி பிரிவுகள், 698 எஸ்.டி பிரிவுகளை கணக்கெடுத்துள்ளார்கள். 1951ஆம் ஆண்டில் இருந்து நாம் எஸ்.சி., எஸ்.டி கணக்கெடுப்பை நடத்திவருகிறோம். அவர்களுக்குள் எந்த மோதலும் வரவில்லையே. அப்போது எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளை கணக்கெடுக்கலாம். ஆனால் கவுண்டர், யாதவர்களை எடுக்கக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயமாகும். சாதி பாகுபாடு மற்றும் சமூகநீதி ஒன்றாக இருக்க முடியாது. இடஒதுக்கீடு இல்லாவிட்டால் சாதியை மறந்துவிடலாம். நீங்கள் சமூகநீதி திட்டங்கள் வைத்துள்ளீர்கள். கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வைத்துள்ளீர்கள் என்கிறபோது, அதில் சாதி என்பது முக்கிய அம்சமாகும். அப்படி இருக்கிறபோது சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மாட்டேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்.
ஒபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பது 1931ஆம் ஆண்டின் சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. EWS என்பது எந்தவித கணக்கெடுப்பும் இல்லாமல் உருவாக்கப்பட்டதாகும். எஸ்.சி., எஸ்.டி இடஒதுக்கீடு, ஓபிசி இடஒதுக்கீடு என்று வருகிறபோது உச்சநீதிமன்றம் புள்ளி விவரங்கள் எங்கே என்று கேட்கும். போதிய புள்ளி விவரங்கள் இல்லாவிட்டால் தள்ளுபடி செய்து விடுவார்கள். ஆனால் EWS என்பதற்கு எவ்வளவு பேர் மக்கள் தொகை என்கிற புள்ளி விபரங்கள் கிடையாது. அவர்களில் எத்தனை பேர் ஏழைகள் என்கிற புள்ளி விபரமும் கிடையாது. ஆனால் அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இன்னும் 6 வருஷத்தில் 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. ஒன்று நாங்கள் இடஒதுக்கீட்டு முறை செயல்படுத்த மாட்டோம் என்று சொல்லுங்கள். உங்களுக்கு எந்த புள்ளிவிவரங்களும் தேவையில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போவது இல்லை. ஆனால் நாங்கள் சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தப் போகிறோம் என்று சொல்கிறீர்கள். உலகில் எந்த நாடும் புள்ளி விவரங்கள் இன்றி எந்த இடஒதுக்கீட்டையும் செயல்படுத்துவது கிடையாது.
உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி பிரிவுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க முயன்றபோது உச்சநீதிமன்றம் புள்ளி விபரம் எங்கே என்று கேள்வி எழுப்பியது. ஒருபக்கம் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது. மறுபுறம் உச்சநீதிமன்றம் புள்ளி விபரங்கள் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று சொல்கிறது. அரசியலமைப்பு சட்டத்தில் ஒபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு விட்டது. எந்த மாநிலங்களில் எல்லாம் உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கொண்டுவர முயற்சித்தார்களோ, அதை உச்சநீதிமன்றம் தடை போட்டுவிட்டது. ஆனால் அதே வாதத்தை EWS இடஒதுக்கீட்டிற்கு வழங்கவில்லை.
150 கோடி மக்கள் வாழுகிற ஒரு நாட்டில் மதங்களாகட்டும், சாதிகளாகட்டும், மொழிகளாகட்டும், ஆயிரக்கணக்கில் இருக்கும் அதனால் முன் தயாரிப்பு பணிகளை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். பீகாரில், தெலுங்கானாவில், கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிகிறபோது, பிரிட்டிஷ்காரர்களால் செய்ய முடிகிறபோது ஏன் மத்திய அரசால் ஓபிசி பிரிவினர் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது. சாதிவாரி கணக்கெடுப்புக்கான முன் தயாரிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்யாவிட்டால் 2011ஆம் ஆண்டில் நடைபெற்றது போல வீணாகிவிடும். எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பது ஒரு கொள்கை முடிவு ஆகும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்பதே தவறாகும். 50 சதவீத உச்சவரம்பை தாண்டக்கூடாது என்று சொல்லிவிட்டு EWS இடஒதுக்கீட்டிற்கு திறந்துவிட்டார்கள். அதனால் 50 சதவீத தடை ஏற்கனவே தகர்க்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 6,325 சாதிகள் உள்ளதாக இந்திய மானிடவியல் சர்வேயில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் 1244 எஸ்.சி.,698 எஸ்.டி பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு 10 ஆண்டுகளும் நாம் 2000 சாதிகளை கணக்கெடுக்கிறோம். அப்போது மீதமுள்ள 4000 சாதிகளை கணக்கெடுக்க முடியாதா? அது ஒன்றும் பெரிய நிர்வாக பிரச்சினை கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.