ஆவடி அருகே 90 வயது தந்தைக்கு மிக பிரமாண்டமாக பிறந்தநாள் விழா கொண்டாடிய மகன் மற்றும் மகள்கள். மயிலாட்டம், ஒயிலாட்டம் மேள தாளம் முழங்க குதிரை வண்டியில் அழைத்து வந்து கேக் வெட்டி ஊருக்கே விருந்து வைத்த சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (90). தற்போது இவருக்கு 90 வயது நிறைவடைந்தது. இவரது தந்தை ஏழுமலை ஆங்கிலேயர் காலத்தில் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தர்மகர்த்தாவாக இருந்துள்ளார். நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து அதன் பின் நடைபெற்ற அனைத்து உள்ளாட்சி தேர்தலிலும் நின்று வெற்றி பெற்று, தொடர்ந்து 49 வருடம் இவர் மற்றும் இவரது வாரிசுகள் பதவி வகித்து வந்துள்ளனர். இவருக்கு ஒரு மகன் 5 மகள்கள் உள்ளன.
இந்நிலையில், கணேசனுக்கு அவரது குடும்பத்தினர் 90வது பிறந்தநாளை ஊரே ஆச்சரியப்படும் வகையில் கொண்டாடி உள்ளனர். தந்தைக்கு புத்தாடை அணிவித்து அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் ஊர் முழுவதும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக பிரம்மாண்டமாக பிறந்தநாள் விழா நடைபெறும் அரங்கிற்கு அழைத்து வந்து கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடினர்.
இதில் மகன், மகனின் குடும்பத்தினர், மகள்கள், மகள்கள் குடும்பத்தினர் பேர பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், ஊர் மக்கள், கட்சி பிரமுகர்கள் என திரளானோர் கலந்து கொண்டு கணேசனிடம் ஆசி பெற்றனர்.
இதில் குறிப்பாக காலம் சென்ற அவரது மனைவியை AI தொழில்நுட்பம் மூலமாக தத்ரூபமாக உருவாக்கி அவருக்கு வாழ்த்து கூறுவது போல மகன் ஏற்பாடு செய்திருந்தார். இதனை கண்டு அவர் கண் கலங்கினார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில் 500 கிலோ மட்டன் பிரியாணி 200 கிலோ சிக்கன், ஆட்டுக்கால் பாயா குழம்பு என தட புடலாக விருந்து பரிமாறப்பட்டது.
- Advertisement -